நீச்சல் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக ஒலிம்பிக் தங்க மகன் ஜோசஃப் ஸ்கூலிங் ஏப்ரல் 2ஆம் தேதி அறிவித்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் அரசியல் தலைவர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்துள்ளன.
வெற்றிகரமான வாழ்க்கைத்தொழிலுக்குப் பாராட்டு தெரிவித்த அவர்கள், ஸ்கூலிங்கின் பங்களிப்பாக அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
“சிங்கப்பூர் கொடியை உயர பறக்கவிட்டதற்கு மிக்க நன்றி. உங்கள் வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்கு எனது நல்வாழ்த்துகள்,” என்று பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், “ஜோ வென்ற பதக்கங்களுக்காக மட்டும் அவரை நாம் நினைவில் கொள்ளவில்லை, அவர் நமக்கு அளித்த நம்பிக்கைக்கும் கூட,” என்றார்.
நாட்டிற்கு ஸ்கூலிங்கின் பங்களிப்புகளுக்காக சிங்கப்பூரர்கள் பலரும் சமூக ஊடகத்தில் நன்றி தெரிவித்துள்ளனர்.
பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, ஸ்கூலிங்கின் ஃபேஸ்புக் பதிவுக்கு 400க்கும் மேற்பட்ட கருத்துகளும் சுமார் 280 பகிர்வுகளும் கிடைத்தன. அவரது இன்ஸ்டகிராம் பதிவுக்கு 23,000க்கும் அதிகமான விருப்பக்குறிகள் கிடைத்தன.
சிங்கப்பூரை உலக வரைபடத்தில் வைத்ததற்காக ஏ.தியாக ராஜூ எனும் ஃபேஸ்புக் பயனாளர் ஸ்கூலிங்கிற்கு நன்றி தெரிவித்தார்.
முன்னதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு ஸ்கூலிங் அளித்த பேட்டியில், தமது வாழ்க்கைத்தொழிலில் அடுத்த கட்டத்துக்கு அடியெடுத்து வைப்பதை “அச்சமானதாகவும் உற்சாகமானதாகவும்” வர்ணித்தார்.