நோயாளிகளைத் துன்புறுத்தியது தொடர்பான குற்றங்களுக்காக 2010ஆம் ஆண்டு முதல் சுகாதாரப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் நால்வர் தண்டிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் தெரிவித்து உள்ளார்.
அந்த நான்கு சம்பவங்களிலும் குற்றவாளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், தற்காலிக வேலைநீக்கம் மற்றும் நிபுணர் பதிவு நிறுத்தி வைத்தல் போன்ற நடவடிக்கைகள் அவை என்றார் சட்ட அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளருமான திருவாட்டி ரஹாயு.
நால்வரில் ஒருவர் மட்டும் 15 மாத வேலைநீக்கத்திற்குப் பிறகு பணிக்குத் திரும்பி உள்ளார். இதர மூவரும் தற்போது வேலையில் இல்லை என்றும் அவர் கூறினார்.
நோயாளிகளைத் துன்புறுத்தியது தொடர்பாக 2010ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் எத்தனை சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது என்றும் அவர்களில் எத்தனை பேர் வேலையில் நீடிக்கிறார்கள் என்றும் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி உறுப்பினர் ரேச்சல் ஓங் கேட்டதற்கு திருவாட்டி ரஹாயு பதிலளித்துப் பேசினார்.
2019 டிசம்பர் மாதம் மனநலக் கழகத்தில் நீண்டகால நோயாளி ஒருவரைத் தாக்கிய குற்றத்திற்காக இரண்டு தாதியருக்கும் ஓர் உதவியாளருக்கும் மூன்று வாரம் முதல் ஒன்பது வாரங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதற்குமுன்பு செய்தி வெளியிட்டு இருந்தது.
தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு தாதிமை இல்லம் ஒன்றில் 67 வயது இல்லவாசியைத் தாக்கியதற்காக தாதிய ஒருவருக்கு 16 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.