ஒன் வோர்ல்ட் அனைத்துலகப் பள்ளியின் சன்டெக் வளாகத்தில் படித்த சில பிள்ளைகளின் பெற்றோர், திறந்து மூன்று ஆண்டுகளேயான அப்பள்ளியின் திடீர் மூடல் பற்றிய செய்தியறிந்து அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் கேள்விகளுக்கு மார்ச் 26ஆம் தேதி பதிலளித்த அப்பள்ளியின் பேச்சாளர், “நகர மறுசீரமைப்பு ஆணையம் அந்த இடத்தில் பள்ளியை நடத்த 2024 ஜூன் மாதம் வரைக்கும்தான் அனுமதியளித்தது. அதற்குப் பிறகு பள்ளியை நடத்த ஆணையம் காலநீட்டிப்பு அளிக்கவில்லை,” என்று விளக்கமளித்தார்.
அப்பள்ளியில் தற்போது மூன்று வயது முதல் 11 வயது வரையிலான 170 பிள்ளைகள் படிக்கிறார்கள். அதன் மற்ற கிளைகள் பொங்கோலிலும் ஜூரோங் வெஸ்டில் உள்ள நன்யாங் பகுதியிலும் உள்ளன.
ஒன் வோர்ல்ட் அனைத்துலகப் பள்ளி, அனைத்துலக பக்கலோரே தொடக்கநிலைத் தேர்வையும், ஜிசிஇ சாதாரண நிலைத் தேர்வுக்கு ஒப்பான டிப்ளோமா எனும் பட்டயக் கல்வித் தேர்வையும் வழங்குகிறது.
சன்டெக் மாநாடு, கண்காட்சி மையத்தின் இடத்தை 2021 ஜூலை 1ஆம் தேதி முதல் 2024 ஜூலை 1ஆம் தேதி வரை பயன்படுத்த நகர மறுசீரமைப்பு ஆணையம் அப்பள்ளியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது என்று ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
2023 ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று, பள்ளி தனது ஒப்பந்தத்தின் நீட்டிப்பு குறித்து ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது என்றும் அந்த இடத்தை பள்ளி நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குப் பிறகு பயன்படுத்த முடியாது என்று 2023 அக்டோபரில் தெரிவித்தது என்றும் ஆணையத்தின் பேச்சாளர் மேலும் கூறினார்.
இயல்பாக சன்டெக் வளாகம் மாநாடு, கண்காட்சி தொடர்பான நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது என்ற காரணத்தாலும் அத்தகைய நடவடிக்கைகளுக்காக அந்த இடம் தேவைப்படுகிறது என்ற காரணத்தாலும், 2024 ஜூலை மாதம் வரைதான் பள்ளி அந்த இடத்தில் செயல்பட முடியும் என்று ஆணையம் வலியுறுத்தியது.
சன்டெக் வளாகத்தில் ஆணையத்தின் இத்தகைய விதிமுறைகளுடன் பள்ளி செயல்பட்டதை அறிந்த பெற்றோர் சிலர் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்தனர். பள்ளி மூடல் தொடர்பாக கருத்துரைத்த பள்ளியின் பேச்சாளர், பள்ளியின் மூடல் பற்றி பள்ளியின் பொது வரவேற்புத் தினங்களின்போது அறிவிக்கப்பட்டது என்றார்.
பெற்றோருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், “சன்டெக் வளாகத்தில் செயல்பட்ட பள்ளிக்கு மாற்று இடம் இதுவரை கிடைக்கவில்லை. மாறாக, பள்ளியின் மற்ற இரு கிளைகளுக்குத் தங்கள் பிள்ளைகளை மாற்றிவிட பெற்றோர் பரிசீலிக்கலாம்,” என்று எழுதப்பட்டிருந்தது.
மத்திய வர்த்தக வட்டாரத்தின் பள்ளிக்காக புதிய இடம் தேடப்பட்டு வருகிறது என்றும் இடம் கிடைத்தவுடன் சன்டெக் வளாகத்தில் படித்த பிள்ளைகள் அங்கு சேர்ந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை 25க்கு மேற்பட்ட பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மற்ற வளாகங்களுக்கு மாற்றி விடுவது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் பேசி வருகின்றனர் என்றும் பள்ளியின் பேச்சாளர் கூறினார்.