புவிசார் அரசியல் மோதல்கள் போன்ற உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய அல்லது உணர்ச்சிபூர்வமான தலைப்புகள் நற்குணமும் குடியியல் கல்வியும் (சிசிஇ) பாடங்களில் சேர்க்கப்படலாம் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் ஏப்ரல் 2 அன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
சிசிஇ படிப்பில், எந்தச் சிக்கலான பாடத்தை பள்ளிகளில் கற்றுத்தருவது என்று கல்வி அமைச்சு எப்படித் தீர்மானிக்கிறது என்று பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஷரேல் தாஹா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திரு சான், இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் மட்டுமே எதிர்காலத்தில் மாணவர்கள் படிக்கும் உணர்வுபூர்வமான பிரச்சினையாக இருக்காது என்று கூறினார்.
இஸ்ரேல் ஹமாஸ் மோதல் குறித்த சிசிஇ பாடங்கள் பிப்ரவரி 2024 முதல் தொடக்கப்பள்ளி மேல் நிலை வகுப்புகள், உயர்நிலை, புகுமுக வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
அப்பாடக் குறிப்புகள் இணையத்தில் பரவி, அப்பாடம் எப்படிக் கற்பிக்கப்படுகிறது,பள்ளிகளில் கற்பிக்கப்பட அது பொருத்தமானதா என்பது குறித்த விவாதங்களைத் தூண்டின.
பதற்றம் அதிகரிப்பதற்கு முன்னர் மோசமடைந்துவரும் பூகோள அரசியல் மோதல்கள் போன்ற தலைப்புகளைப் பற்றி மாணவர்கள் விவாதிப்பது பயனுள்ளதாக இருக்குமா என்று திரு ஷரேல் கேட்டார்.
சிசிஇ பாடங்களில் இத்தகைய தலைப்புகளைச் சேர்ப்பதன் நோக்கம், சமுதாயத்தில் உள்ள கண்ணோட்டங்களின் பன்முகத்தன்மையையும், சிங்கப்பூரின் முன்னுரிமைகள், நிலைப்பாடுகள், அக்கறைகளையும் மாணவர்கள் புரிந்துகொள்ள உதவுவதாகும் என்று அமைச்சர் சான் கூறினார்.
இஸ்ரேல்- ஹமாஸ் குறித்த பாடங்களை மாணவர்கள் பார்த்துள்ளபோதிலும் அவை ஏன் பொதுவில் வெளியிடப்படவில்லை என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் எழுப்பிய கேள்விக்கு, பாடக்குறிப்புகள் மட்டும் அவை எப்படிக் கற்பிக்கப்படுகின்றன என்பதை விளக்காது என்று அமைச்சர் பதிலளித்தார். பாடம் குறித்து ஆசிரியர்களுடன் பெற்றோர் பேசி விளக்கம் பெறுவதே சிறந்தது என்றார்..
“கல்வி அமைச்சு வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதுடன், பாடங்களை பெற்றோருக்குக் காட்டவும் தயாராக உள்ளது. எவ்வாறு பாடக்குறிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை விளக்குவதற்கும் தயாராக இருக்கிறோம்,” என்று திரு சான், சில பள்ளிகள் ஏற்கெனவே பெற்றோரிடமிருந்து பாடம் குறித்து விளக்க கோரிக்கையைப் பெற்றுள்ளன என்றார்.
சில பள்ளிகள் பாட நூல்கள் குறித்து சம்பந்தப்பட்ட பெற்றோரிடமிருந்து கோரிக்கைகளைப் பெற்றுள்ளன. மேலும், அந்தப் பள்ளிகள் பெற்றோரையும் ஈடுபடுத்தியுள்ளன.
உள்ளடக்கத்தை மேம்படுத்துவது குறித்த ஆக்கபூர்வமான ஆலோசனைகளை கல்வி அமைச்சு வரவேற்கும் அதே வேளையில், அனைவரையும் திருப்திப்படுத்தும் பாடத் தொகுப்பை உருவாக்குவது சாத்தியமில்லை என்பதை அமைச்சர் சுட்டினார்.
“இத்தகைய வேறுபாடுகள் இருப்பதையும் அவை பல்வேறு பிரிவு மக்களை பல்வேறு திசைகளில் பிரிக்கக்கூடிய உணர்ச்சிகரமான தாக்கத்தை கொண்டிருப்பதையும் புரிந்துகொள்வதே இலக்கு,” என்றார் திரு சான்.
“இத்தகைய சவால்களைக் கடந்து செல்லவும், ஒரு முடிவை எடுக்கவும், மிக முக்கியமாக, இந்த மண்ணில் இருக்கும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் இழக்காமல் இருக்க நம் பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவுவது என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வதே எங்கள் குறிக்கோள்,” என்றார் அவர்.