போப் பிரான்சிஸ் வரும் செப்டம்பரில் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலஞ்சென்ற இரண்டாம் போப் ஜான் பால் 1986ல் கடைசியாக சிங்கப்பூருக்கு வந்தபோது அவரைக் காண ஆயிரக்கணக்கான ரோமன் கத்தோலிக்கர்கள் திரண்டனர்.
அந்தப் பயணத்தின்போது அவர் சிங்கப்பூரில் ஐந்து மணி நேரம் மட்டும் தங்கியிருந்தார்.
‘அமெரிக்கா’ சஞ்சிகையின் செய்தியாளர் ஜெரால்ட் ஓ’கொனெலிடம் மார்ச் 26ஆம் தேதி பேசிய வத்திக்கான் வெளியுறவு அமைச்சரான பேராயர் பால் ஆர்.காலேகர், இவ்வாண்டு இந்தோனீசியா, சிங்கப்பூர், தீமோர் லெஸ்டே, பப்புவா நியூ கினி ஆகிய நாடுகளுக்குச் செல்ல போப் பிரான்சிஸ் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
மாதாந்திர கத்தோலிக்க சஞ்சிகையான ‘அமெரிக்கா’, 1909ல் ஏற்படுத்தப்பட்டது.
இந்த வட்டாரத்துக்கு போப் பிரான்சிஸ் வருவது குறித்த செய்தியை இரு கத்தோலிக்க ஊடகத் தளங்கள் ஜனவரியில் வெளியிட்டன.
உடல் நலமாக இருந்தால், போப் பிரான்சிஸ், 87, சிங்கப்பூரில் குறைந்தது ஒரு நாள் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வியட்னாமுக்குச் செல்வதற்கான திட்டமும் பரிசீலிக்கப்படுவதாக ‘அமெரிக்கா’ சஞ்சிகையின் அறிக்கை குறிப்பிட்டது.