சிங்கப்பூரின் ஒரே ஒலிம்பிக் வெற்றியாளரான ஜோசஃப் ஸ்கூலிங், ஒருநாள் தூங்கி கண்விழித்தபோது நீச்சலில் போட்டியிடுவது குறித்த உணர்வை இழந்தபோதுதான், போட்டியிடுவதில் இருந்து ஓய்வுபெறுவது பற்றி யோசிக்கத் தொடங்கினார்.
நீச்சல் போட்டிகளிலிருந்து தாம் ஓய்வுபெறுவதாக ஏப்ரல் 2ஆம் தேதி சமூக ஊடகத்தில் அவர் அறிவித்தார். பின்னர் அதே நாள் காலை சீன நீச்சல் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தமது முடிவு குறித்து விரிவாகப் பேசினார்.
“ஓய்வுபெறுவது தொடர்பிலான அர்த்தம் எனக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், ஒரு நீச்சல் வீரராக அடுத்து எதிர்பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்பதையே அது குறிக்கிறது.
“எனது வாழ்க்கைத்தொழிலின் அடுத்த கட்டத்தில் இதே முயற்சி, அர்ப்பணிப்பு, கவனத்தை நான் தொடர்ந்து செலுத்துவேன்,” என்று ஸ்கூலிங் கூறினார்.
ஓய்வுபெறுவது குறித்த ஸ்கூலிங்கின் அறிவிப்பு அனைத்துலக அளவில் தலைப்புச் செய்தியானது. ராய்ட்டர்ஸ், அமெரிக்காவின் என்பிசி நியூஸ், தி ஜப்பான் டைம்ஸ் போன்ற ஊடகத் தளங்கள் அதுகுறித்து செய்தி வெளியிட்டன.