வட்ட ரயில் பாதையின் ஆறாம் கட்டத்தை, தற்போதைய ரயில் கட்டமைப்புடன் இணைக்கும் தடப் பணிகள் திட்டமிட்டதற்கு முன்னதாகவே நிறைவடைந்துவிட்ட நிலையில், கென்ட் ரிஜ் நிலையத்திற்கும் ஹார்பர்ஃபிரன்ட் நிலையத்திற்கும் இடையே ஏப்ரல் 6 முதல் சேவை வழக்கநிலைக்குத் திரும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் தடப் பணிகளுக்காக தெலுக் பிளாங்கா, ஹார்பர்ஃபிரன்ட் வட்டப் பாதை நிலையங்களில் ஜனவரி 20 முதல் ஒரு தடம் மூடப்பட்டது.
மற்றொரு தடத்தில் ஹார்பர்ஃபிரன்ட் நிலையத்திற்கும் லெப்ரடோர் பார்க் நிலையத்திற்கும் இடைவழி ரயில் ஒன்று இயங்கி வந்தது.
இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஹார்பர்ஃபிரன்ட், மரினா பே ஆகிய இரண்டுக்கும் இடையே மூன்று நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் வட்ட ரயில் பாதை முழுமைபெறவுள்ளது.
ரயில் பணிகளில் ஈடுபட்டதற்காக பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்போது பொறுமையாக இருந்ததற்காக பயணிகளுக்கும் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் புதன்கிழமையன்று (ஏப்ரல் 3) ஃபேஸ்புக்கில் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
“வட்டப் பாதையை முழுமையாகக் கட்டிமுடிப்பதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. 2026ஆம் ஆண்டுக்குள் கடைசி மூன்று ரயில் நிலையங்களான கெப்பல், கேன்டன்மென்ட், பிரின்ஸ் எட்வர்ட் ஆகியவை திறக்கப்படும்,” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.