பொருளியல் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் வேளையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புரியப்படும் குற்றங்கள், பாதுகாப்பு மிரட்டல்கள் ஆகியவை அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்வது சவால்மிக்கதாக இருக்கும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பாதுகாப்பு மிரட்டல்களை எதிர்கொள்ளக் கூடுதல் அனைத்துலக ஒத்துழைப்பு தேவை என்று அவர் கூறினார். குறிப்பாக, தொழில்நுட்ப மேம்பாட்டில் இது மிகவும் அவசியமானது என்றார் அவர். அதிகரித்துவரும் பாதுகாப்பு மிரட்டல்களை எதிர்கொள்ள அனைத்துலகப் பங்காளித்துவம், ஒத்துழைப்பு ஆகியவை வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் சண்முகம் வலியுறுத்தினார்.
“அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் பொருளியல் வாய்ப்புகள் உச்சத்தை எட்டும். அப்போது கூடுதல் உள்கட்டமைப்பு இருக்கும். வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வெகுவாக அதிகரிக்கும்.
“இவை எல்லாம் இந்த வட்டார நாடுகளுக்கு நன்மை பயக்கும். ஆனால் அதே சமயம், கூடுதல் பிரச்சினைகளும் தலைதூக்கும். தற்போது இருக்கும் அதே அளவிலான வளங்களை அல்லது சற்று அதிகமான வளங்களைக் கொண்டு உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகள் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும்,” என்றார் அமைச்சர் சண்முகம்.
மிலிபோல் ஏஷிய பசிபிக் அண்ட் டெக்எக்ஸ் மாநாட்டில் இதுகுறித்து அமைச்சர் சண்முகம் பேசினார்.
இந்த மாநாடு ஏப்ரல் 3லிருந்து 5ஆம் தேதி வரை சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.
ஹோம் டீம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் ஏற்பாட்டில் இந்த மாநாடு முதல்முறையாக நடத்தப்படுகிறது. இதை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு உள்துறை அமைச்சும் பிரான்சின் உள்நாட்டு விவகார அமைச்சும் ஆதரவு வழங்குகின்றன.
மாநாட்டில் கலந்துகொள்ளும் முக்கிய அரசாங்க அதிகாரிகள், தொழில்துறைத் தலைவர்கள், கல்விமான்கள் ஆகியோர் புதிய பாதுகாப்பு மிரட்டல்கள், புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் ஆகியவை தொடர்பாக கலந்துரையாடுவர்.
இவ்வாண்டு நடைபெறும் மாநாட்டில் உலக நாடுகளிலிருந்து 10,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.