எல்லை தாண்டிய மோசடிக் கும்பலின் கையாளாக செயல்பட்ட மலேசிய நாட்டவர் ஒருவருக்கு 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இவர் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துள்ளார்.
வோங் ஜியா ஹாவ், வயது 24, ஏப்ரல் 5ஆம் தேதி, குற்றச்செயல் மூலம் அடைந்த பலன்களை வேறொருவர் அடைய உதவி புரிந்ததை ஒப்புக்கொண்டார்.
இந்தக் குற்றச்செயல் நடந்த சமயம் வோங் ஜோகூர் பாருவில் உள்ள ‘வி சிங் பிஸ்ட்ரோ’ என்ற கேளிக்கைக் கூடத்தில் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் ஊற்றித் தருபவராக வேலை பார்த்து வந்தார் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த கரவோக்கே மதுபானக் கூடத்தில் வேலை பார்த்து வந்தபோது சிங்கப்பூரில் உள்ள வங்கி தானியக்க ரொக்க இயந்திரத்திலிருந்து கையாடப்படும் பணத்தை கொண்டு செல்ல பணிக்கப்பட்டார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பணத்தை வோங் எங்கு கொண்டு சென்றார் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.
வோங்குடனான இந்த ஏற்பாடு 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியதாகவும் ஒவ்வொரு முறை வோங் பணம் கொண்டு சென்றபோது அவருக்கு மலேசிய ரிங்கிட் 200லிருந்து 400வரை வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றம் அறிந்தது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வோங் தமது கடன்களில் சிலவற்றை அடைத்துள்ளார் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். வோங் இதுபோல் மூன்று முதல் நான்கு முறை பணத்தை வேறு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.