சிங்கப்பூருக்கென்று கவிஞர் மா. அன்பழகன் எழுதித் தயாரித்துள்ள புதிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைப் பேராசிரியர் சுப திண்ணப்பன் திரையில் அறிமுகப்படுத்தினார். தமிழ்த் திரையுலக இளம் இசையமைப்பாளர் கோகுல் ஆதவ் இப்பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார்.
சிங்கப்பூரின் அடையாளங்களாகக் கருதப்படும் புகழ்பெற்ற இடங்களில் சிங்கை நடனமணி திருமதி மீரா, பாடலுக்கேற்ப அபிநயம் பிடித்துப் பரதநாட்டியம் ஆட, ‘நட்சத்திரம்‘ பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்து அழகுற தொகுத்துத் தந்துள்ளார்.
இப்புதிய தமிழ்த்தாய் ஒலி, ஒளி வாழ்த்துப் பாடலை ஏப்ரல் 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை, ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள சூரிய மகாலில் எளிய முறையில் வெளியிடப்பட்டு, பொதுப் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் தமிழ் வாழ்த்தை வெளியிட, மூத்த தமிழ் அறிஞர் சுப திண்ணப்பன் பெற்றுக்கொண்டு, “பாடல் இளங்கதிரவன் ‘தமிழே‘ என்ற இனிய சொல்லுடன் தொடங்குவதைப் பார்த்தவுடன், சூரியன் புற இருளை அகற்றும், தமிழ் அக இருளை அகற்றும் என்று சொல்லத் தோன்றுகிறது என்றார்.
“அத்துடன் பாடலில் ‘சிங்கை அரசால் சிறப்புறும் எம்மொழி’ என்பதோடு ‘வளர்தமிழ் உனையே வாசித்து நேசிப்போம்’ போன்ற வரிகள் நமது நாட்டுக்குத் தொடர்புடைய விழுமியங்களாக எழுதப்பட்டிருப்பதுடன், தொன்மையான உயர்தனிச் செம்மொழியாகிய நம் தாய்மொழியின் சிறப்புகளை ரத்தினச் சுருக்கமாகக் கவிஞர் எழுதியுள்ளார்.
“வளர்ந்த மூப்புடன் விளங்கிய போதிலும், இளமையும் புதுமையும் இணைந்துநீ வாழ்கவே,” என்ற இறுதி வரி சிந்தித்துச் செயல்படுத்தப்பட வேண்டிய எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தாகப் பார்க்கப்படுகிறது.
“இப்பாடலை விருப்பமுள்ள சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகள், கல்லூரி, பள்ளிகள் தங்கள் தமிழ் நிகழ்ச்சிக்கு வாழ்த்துப் பாடலாக இதை யூ டியூபிலிருந்து இலவசமாக எடுத்துக் கையாள அனுமதித்துள்ள திரு அன்பழகனைப் பாராட்ட வேண்டும்,” என்று திரு தினகரன் குறிப்பிட்டார்.
https://youtube.com/watch?v=8LOeG21qMWI&feature=shared எனும் முகவரிக்குச் சென்று திரு அன்பழகனின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எடுத்து பயன்படுத்தலாம்.