சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரின் வாழ்க்கை பற்றி புத்தகம் எழுதி அதற்கு விருதும் பெற்றவர் 46 வயது திரு முகம்மது ஷரிஃப் உட்டின்.
ஆனால் அண்மையில் இந்த பங்ளாதேஷ் நாட்டவர், செய்யாத தவற்றுக்குத் தன் வேலையை இழக்க நேரிட்டது.
சமூக ஊடகங்களில் திரு ஷரிஃபின் வழக்கு குறித்து வெளிநாட்டு ஊழியர் சமூகநலக் குழுக்கள் காணொளி ஒன்றை வெளியிட்டன.
இந்த காணொளியில், திரு ஷரிஃப் தனது வேலையை இழந்துவிட்டதாகப் பகிர்ந்துகொண்டார்.
கடன் வாங்கி அதைத் தான் திருப்பித் தரவில்லை எனக் கூறி, சட்டவிரோதமாகக் கடன் கொடுக்கும் கூட்டம் தனக்குத் தொல்லை தருவதாகக் காவல்துறையிடம் தெரிவிக்குமாறு திரு ஷரிஃப் தன் முதலாளியைக் கேட்டுக்கொண்டார்.
அதன் பிறகு வேலையை விட்டு விலக முதலாளி தனக்கு ஒரு மாத அறிவிப்பு தந்ததாகக் கூறினார். இதன்படி, ஏப்ரல் 12 அவரது கடைசி நாள்.
இதற்கிடையே, தான் கடன் ஏதும் வாங்கவில்லை என்று உறுதியாகக் கூறினார் திரு ஷரிஃப்.
இதையடுத்து, 760க்கும் அதிகமானோரின் ஆதரவை திரு ஷரிஃபின் வழக்கு பெற்றது. திரு ஷரிஃப் சிங்கப்பூரிலேயே இருப்பதற்கான மனுவில் இணையத்தின் மூலம் இவர்கள் கையெழுத்திட்டனர்.
முன்னதாக, திரு ஷரிஃபின் முதலாளியின் மகளது வீட்டு முகவரிக்குக் கடனாளிக் குறிப்புகள் வந்திருந்தன. அவற்றில் திரு ஷரிஃபின் பெயர் இருந்தது. இதையடுத்து, கேலாங் அக்கம்பக்க காவல் நிலையத்துக்கு ஆலோசனை நாடிச் சென்றார் அந்த மகள்.
தங்களது சுற்றுக்காவல் பணிகளை முதலாளியின் மகளின் வீட்டைச் சுற்றி முடுக்கிவிடுவதாக அங்கிருந்த அதிகாரி தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியரின் வேலை அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்பட்டு அந்த முதலாளியின் கீழ் அவர் இனி வேலை செய்யாவிட்டால் இந்த தொல்லை எல்லாம் நீங்கிவிடும் என்று அந்த அதிகாரி அக்கறையின் பெயரில் கூறியதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
பின்னர், திரு ஷரிஃபின் முதலாளி சார்பாக மனிதவள அமைச்சுடன் ஒருவர் தொடர்புகொண்டு இது குறித்து கேட்டார்.
அப்போதும் திரு ஷரிஃபை வேலையை விட்டு நிறுத்தத் தாங்கள் அறிவுறுத்தவில்லை என்றது அமைச்சு.
வேலை அனுமதிச் சீட்டை ரத்து செய்தால், ஊழியருக்கு இதுபற்றி தெரியப்படுத்தி, சம்பளம் கொடுத்து, மீண்டும் அவரின் நாட்டுக்கு அனுப்புவதற்கான செலவை ஏற்க வேண்டும் என்று அமைச்சு விளக்கம்தான் அளித்திருந்ததாகக் கூறியது.
அதையடுத்து திரு ஷரிஃபுக்கு அவரின் முதலாளி ஒரு மாத அறிவிப்பைத் தந்து வேலையை விட்டு போகுமாறு தெரிவித்தார். அதே நாளன்று திரு ஷரிஃப் காவல்துறையிடம் புகார் அளித்தார். உரிமமின்றி செயல்பட்ட கடன் கொடுப்போரால் தான் குறிவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.
வேண்டுமென்றே துன்புறுத்தலுக்கு இவர் தற்போது குறிவைக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக மனிதவள அமைச்சு ஏப்ரல் 6ஆம் தேதி அதன் ஃபேஸ்புக்வழி அறிக்கை வெளியிட்டது.
சிங்கப்பூரில் 16 ஆண்டுகள் பணியாற்றிய திரு ஷரிஃபை அவரின் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்குமாறு அவருடைய முதலாளியிடம் மனிதவள அமைச்சும் காவல்துறையும் அறிவுறுத்தவில்லை என்று அமைச்சு தெளிவுபடுத்தியது.
இந்த விசாரணை முடிவடையும்வரை திரு ஷரிஃப் தொடர்ந்து சிங்கப்பூரில் இருக்க அனுமதிக்கப்படுவார் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
விசாரணை முடிவடைந்ததும் திரு ஷரிஃப் புது நிறுவனத்தில் சேர்ந்து தொடர்ந்து சிங்கப்பூரில் வேலை செய்தும் வசித்தும் வரலாம் என்று மனிதவள அமைச்சின் அதிகாரிகள் தனது தங்குவிடுதிக்கு ஏப்ரல் 5ஆம் தேதி வந்து தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, நியாயமற்ற பணிநீக்கத்திற்கு எதிராக வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பாதுகாப்பு தேவை என்று திரு ஷரிஃப் வலியுறுத்தியுள்ளார்.