துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் ஏப்ரல் 8லிருந்து 10ஆம் தேதிவரை ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகருக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்வார்.
அதேபோல், பின்னர் அவர் ஏப்ரல் 10லிருந்து 13ஆம் தேதிவரை ஃபிரான்சின் பாரிஸ் நகரத்துக்குச் செல்வார். இந்தப் பயணங்களின் மூலம் அவர் சிங்கப்பூருக்கும் அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால, ஆழமான, பன்முக உறவுகளை மேம்படுத்துவார் என்று கூறப்படுகிறது.
பெர்லினில் துணைப் பிரதமர் வோங், ஜெர்மனியின் அதிபர் டாக்டர் ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மயர், நாட்டின் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் ஆகியோரை சந்திப்பார். அத்துடன், திரு வோங் அந்நாட்டின் துணைப் பிரதமரும் பொருளியல் விவகாரங்கள், பருவநிலை மாற்றம் ஆகியவற்றுக்கான அமைச்சர் டாக்டர் ராபர்ட் ஹாபெக், நிதியமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் ஆகியோரைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஜெர்மனியில் தொழிலதிபர்களை சந்தித்த பின்னர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஜெர்மனியில் உள்ள வெளிநாட்டு சிங்கப்பூரர்களுடன் விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் திரு வோங், அதிபர் மெக்ரோனைச் சந்திப்பார். அத்துடன், பொருளியல் விவகாரங்கள், நிதி, தொழிலியல், மின்னிலக்க இறையாண்மை அமைச்சர் புருனோ ல மெயர் ஆகியோரையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. பாரிசில் தெமாசெக் நிறுவன அலுவலகத் திறப்பு விழாவிலும் திரு வோங் பங்கேற்பார். அதைத் தொடர்ந்து ஃபிரஞ்சு தொழிலதிபர்களையும் சந்தித்த பின் ஃபிரான்சில் உள்ள வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களின் விருந்துபசரிப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.