போலி ஆவணங்கள் தயாரித்ததாக மருத்துவர் ஒருவர் மீது ஏப்ரல் 8ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டது.
அழகியல் தொடர்பான நடைமுறைகள் குறித்து நடத்தப்பட்ட பயிலரங்கில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட வருகைச் சான்றிதழ்களில் இருந்த பெயர்களை 34 வயது பெர்னட் டான் வென் ஷெங் மாற்றியதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, அரசு ஊழியரிடம் பொய்த் தகவல் கொடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மரினா பே லிங்க் கடைத்தொகுதியில் உள்ள பே எஸ்தெட்டிக்ஸ் மருந்தகத்தில் டான் மருத்துவராக செயல்பட்டு வருவதாக சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின் இணையத் தரவுத்தளம் காட்டுகிறது.
2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதியன்று எஸ்தெட்டிக் டெர்மட்டாலஜி கல்விக் குழுமத்தின் நான்கு வருகைச் சான்றிதழ்களில் இருந்த பெயர்களை டான் மாற்றியதாகக் கூறப்படுகிறது.
அதே நாளன்று அந்த சான்றிதழ்கள் அனைத்தும் உண்மையானவை என்று அரசு ஊழியர் ஒருவரிடம் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணம் தயாரித்தல் தொடர்பாக ஒவ்வொரு குற்றச்சாட்டின் பேரில் நான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

