வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை விலைகள் மார்ச் மாதத்தில் 0.3 விழுக்காடு என்னும் சிறிய ஏற்றம் கண்டன. இது ஆறாவது மாத தொடர் விலை உயர்வு.
இருப்பினும் அந்த மாதத்தில் விற்பனை ஆன வீடுகளின் எண்ணிக்கை குறைவு.
பெரிய வீடுகளுக்கான தேவை திடமாக இருப்பதும் மில்லியன் வெள்ளி மதிப்பிலான வீடுகளின் பரிவர்த்தனைகள் அதிகரிப்பதும் அவற்றுக்கான காரணங்கள் என்று பகுப்பாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மார்ச் மாத சிறிய விலை ஏற்றம் பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் குறைவு. பிப்ரவரியில் மறுவிற்பனை வீடுகளின் விலைகள் 0.5 விழுக்காடு உயர்ந்ததாக சொத்துச் இணையத்தளங்களான எஸ்ஆர்எக்ஸ் மற்றும் 99.co தெரிவிக்கின்றன.
ஆண்டு அடிப்படையில், வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை 6.2 விழுக்காடு அதிகரித்ததாகவும் அந்தத் தளங்கள் திங்கட்கிழமை (ஏப்ரல் 8) குறிப்பிட்டன.
இந்த விலை ஏற்றம் மெதுவான வளர்ச்சி என்றபோதிலும் கடந்த ஆறு மாத ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் விலை ஏற்றம் வேகம் கண்டிருப்பதை உணர்த்துவதாக சொத்து நிறுவனமான ‘ஆரஞ்சுடீ குரூப்’பின் தலைமை ஆராய்ச்சியாளர் திருவாட்டி கிறிஸ்டின் சன் தெரிவித்தார்.
அதற்கான விளக்கத்தையும் அவர் வெளியிட்டார்.
“2023 செப்டம்பர் மாதத்துக்கும் 2024 மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வீவக மறுவிற்பனை விலைகள் 3.8 விழுக்காடு உயர்ந்தன.
“இது, இதற்கு முந்திய ஆறு மாதத்தில், அதாவது 2023 மார்ச் மாதத்துக்கும் 2023 செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் சந்தித்த ஏற்றத்தைக் காட்டிலும் 2.3 விழுக்காடு அதிகம்.
“எனவே, இவ்வாண்டின் மார்ச் வரையிலான அதிக விலை ஏற்றம் காரணமாக விற்பனை வேகம் மெதுவடைந்திருக்கிறது,” என்றார் திருவாட்டி சன்.
மார்ச் மாதத்தில் குறைவான மறுவிற்பனை வீடுகளே கைமாறின. மொத்தம் 2,063 வீடுகள் அந்த மாதத்தில் விற்பனை ஆனதாக மதிப்பிடப்படுகிறது. இது, அதற்கு முந்திய மாதத்தைக் காட்டிலும் 3.3 விழுக்காடு குறைவு.
கடந்த ஆண்டின் (2023) மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 9.8 விழுக்காடு குறைவு என்று எஸ்ஆர்எக்ஸ் மற்றும் 99.co தளங்கள் தெரிவித்தன.