எஸ்பிஎச் மீடியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஜூலை 15ஆம் தேதியிலிருந்து தற்போது சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளராகப் பதவி வகிக்கும் திரு சான் யெங் கிட் செயல்படுவார். இவர் தகவல்தொடர்பு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர்.
எஸ்பிஎச் மீடியாவின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான திருவாட்டி டியோ லே லிம் பணி ஓய்வுபெறுகிறார்.
இந்தத் தகவலை எஸ்பிஎச் மீடியா ஏப்ரல் 8ஆம் தேதியன்று வெளியிட்டது.
59 வயது திரு சான் அரசாங்கத்துறை, தொழிலாளர் இயக்கம், தனியார் துறை ஆகியவற்றில் பல்வேறு பதவிகளை வகித்து பேரளவில் அனுபவம் பெற்றவர் என்று அது கூறியது.
அவரது பரந்த அனுபவம் எஸ்பிஎச் மீடியாவுக்கு அதிகப் பலனைத் தரும் என்று தெரிவிக்கப்பட்டது.
“தரமுள்ள இதழியல் மற்றும் செய்தித்துறை வாயிலாக சிங்கப்பூர் மக்களை ஒன்றிணைப்பதும் செய்திகளை அவர்களுக்குக் கொண்டு போய் சேர்ப்பதும் எஸ்பிஎச் மீடியாவின் இலக்கு. இதை நிலைநிறுத்தவும் நடைமுறைப்படுத்தவும் திரு சான் கடப்பாடு கொண்டுள்ளார். எஸ்பிஎச் மீடியாவுக்கு சமூக ஊடகம் போட்டியாக உள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில் புதிய வாசகர்களை ஈர்த்து அவர்களைச் சென்றடைய மின்னிலக்கத் தளங்களைப் பயன்படுத்த எங்கள் செய்தி அறைகளுக்கு அவர் ஆதரவு வழங்குவார். அத்துடன், நீடித்த நிலைத்தன்மைமிக்க வர்த்தக உத்தியை வகுக்கவும் அவர் துணை புரிவார்.
“எஸ்பிஎச் மீடியாவின் மின்னிலக்க உருமாற்றத்துக்கு வலுவான அடித்தளம் அமைத்து அதைத் தொடங்கி வைத்த திருவாட்டி டியோ லே லிம்முக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். திருவாட்டி லிம் அமைத்துத் தந்த வலுவான அடித்தளத்தை திரு சான் மேம்படுத்துவார்,” என்று எஸ்பிஎச் மீடியாவின் தலைவர் திரு கோ பூன் வான் கூறினார்.
எஸ்பிஎச் மீடியாவின் இயக்குநர் சபையின் உறுப்பினராக திரு சான் மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். அதே மாதம் அவர் தகவல்தொடர்பு மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநர் சபையிலிருந்து விலகினார். ஆணையத்தின் இயக்குநர் சபையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவர் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு அவர் தலைமை தாங்கினார். தற்காப்பு அமைச்சின் நிரந்தரச் செயலாளராக அவர் 2013லிருந்து 2019 வரை பதவி வகித்தார்.
60 வயது திருவாட்டி டியோ ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு எஸ்பிஎச் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகித்தார்.
2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதியன்று திருவாட்டி டியோ தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அப்போது இடைக்கால தலைமை நிர்வாகியாக இருந்த பேட்ரிக் டேனியலிடம் இருந்து அவர் அப்பொறுப்பைப் பெற்றார்.
அவரது தலைமையின்கீழ் எஸ்பிஎச் மீடியா பல மாற்றங்களைக் கண்டது. மின்னிலக்க ஒருங்கிணைப்பு, வாடிக்கையாளர் அனுபவம், திறன் மேம்பாடு ஆகியவை அவற்றில் அடங்கும்.
பலதரப்பட்ட வாசகர்களின் விருப்பம், தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு எஸ்பிஎச் மீடியாவின் மின்னிலக்கத் தளங்களும் கைப்பேசி செயலிகளும் புதுப்பிக்கப்பட்டன. எஸ்பிஎச் மீடியாவின் செய்திச் செயலிகளில் பல புதிய அம்சங்கள் உருவாக்கப்பட்டன.
திருவாட்டி டியோவின் பதவிக்காலத்தில் தமிழ் முரசு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.