சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக ஐந்தாவது முறை நுழைந்த இந்தோனீசிய ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தோனீசியாவின் பாத்தாமில் இருந்து மரப்படகு மூலம் கடற்பயணம் செய்து, பாதி வழியில் படகைக் கைவிட்டு கடலில் நீந்தி சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைவதை அந்த 26 வயது ஆடவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
குடிநுழைவுக் குற்றங்களுக்காக ஏற்கெனவே சிறை, பிரம்படிகள் மூலம் தண்டிக்கப்பட்டபோதிலும் மீண்டும் அதே குற்றத்தில் அவர் ஈடுபட்டார்.
பிரிக் என்ற ஒற்றைச்சொல்லைப் பெயராகக் கொண்ட அவருக்கு, ஆக அண்மைய குற்றத்திற்காக திங்கட்கிழமை (ஏப்ரல் 8) ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனையும் ஒன்பது பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
உரிய அனுமதி இன்றி சிங்கப்பூருக்குள் நுழைந்ததன் மூலம் குடிநுழைவுச் சட்டத்தை மீறிய ஒரு குற்றத்தையும் சிங்கப்பூரை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் எழுத்துபூர்வ அனுமதி இன்றி மீண்டும் சிங்கப்பூருக்கு வந்த குற்றத்தையும் பிரிக் ஒப்புக்கொண்டார்.
கடந்த மார்ச் மாதம் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது சிங்கப்பூரில் இருப்பதற்கான சட்டபூர்வ ஆவணம் எதுவும் பிரிக்கிடம் இல்லை.
2017ஆம் ஆண்டு முதல் குடிநுழைவுக் குற்றங்களைப் புரிந்ததற்காக ஏற்கெனவே மொத்தம் 25 பிரம்படிகளைத் தண்டனையாகப் பெற்றவர் பிரிக் என்பது குறிப்பிடத்தக்கது.