அனைத்துலக தங்கம் விலையேற்றத்தின் தாக்கத்தை சிங்கப்பூரிலுள்ள தங்க நகைக் கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் உணர்கின்றனர்.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்க விலை, திங்கட்கிழமை (ஏப்ரல் 8) 97.50 வெள்ளி ஆகப் பதிவாகியுள்ளது. இது, கடந்த திங்கட்கிழமையன்று பதிவான 89.75 வெள்ளியைக் காட்டிலும் அதிகம்.
விலை தொடர்ந்து உயரும் என்ற எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள், நிதிச் சந்தையிலும் கடைகளிலும் தங்கத்திற்கான தேவையை அதிகரித்துவிடக்கூடும் என்று தங்க வியாபாரிகள் தமிழ் முரசிடம் கூறினர்.
விலையேற்றத்தால் தங்கம் விற்பனை, குறிப்பாக வாரயிறுதி விற்பனை அதிகரித்திருப்பதாக ‘ஜோயாலுக்காஸ் சிங்கப்பூர்’ நிறுவனத்தின் வட்டார நிர்வாகி ஃபிரெட்டி பால் கூறினார். “விலையேற்றம் தங்கத்தின் மீதான நம்பிக்கையை உயர்த்துகிறது. ஆபரணங்கள் மட்டுமின்றி தங்கக் கட்டி விற்பனை அதிகரித்துள்ளது,” என்றார் அவர். கடை விற்பனையில் 5 விழுக்காடு, தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களைச் சார்ந்தது என்று குறிப்பிட்டார்.
தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக ‘ராயல் கிங்ஸ்’ தங்க விநியோக நிறுவனக் குழுமத் தலைவர் சிராஜுதீன் செய்யது முஹம்மதுவும் தெரிவித்தார்.
“தற்போது 1 கிலோவுக்கு $102,000ஆக இருக்கும் தங்கம் விலை $120,000 வரை அதிகரிக்கக்கூடும்,” என்றார் அவர்.
தங்கம் விலையின் நிலைத்தன்மையை வாடிக்கையாளர் விரும்புவதால் விலையேற்றத்தால் வர்த்தகம் பாதிக்காது என்றும் இத்துறைக்குச் சாதகமான போக்கு என்று ‘மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்’ நகைக்கடையின் அனைத்துலகச் செயலாக்க இயக்குநர் ஷாம்லால் அகமது கூறினார்.
தங்கத்தை முதலீட்டுக்காக வாங்குவோர், விலைகள் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் என எதிர்பார்த்து அதிகம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.
இருந்தபோதும், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காக நகைகளை வாங்குவதைத் தள்ளிப்போட இயலாதோரும், வசதி குறைந்தோரும் விலையேற்றத்தால் கவலை அடைகின்றனர்.
முன்னர் ஒரு கிராம் தங்கம் $50க்கு வாங்க முடிந்த நிலையில் இந்த விலையேற்றம் அதிகப்படியாக இருப்பதை உணர்வதாக அலுவலக அதிகாரி தமயந்தி முத்து, 55, தெரிவித்தார்.
“ஆயினும் என் மகளின் திருமணம் விரைவில் நடக்கவிருப்பதால் விலையேற்றத்தைத் தவிர்க்க முடியாமல் தங்க ஆபரணங்களை வாங்கித்தான் ஆகவேண்டும்,” என்றார் அவர்.
தவணை முறையில் பணம் செலுத்தித் தங்கம் வாங்கும் அலுவலக நிர்வாகி மோகன் சங்கீதா, 42, விலையேற்றம் தொடர்ந்து நீடித்து வாங்கிய நகைகளின் ஒட்டுமொத்தச் செலவை அதிகரித்துவிடக்கூடும் எனக் கவலை தெரிவித்துள்ளார்.