சிங்கப்பூரின் சட்டங்கள் தெள்ளத்தெளிவாக இருப்பதாலும் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாலும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை சிங்கப்பூரர்கள் உணர்கின்றனர் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதக் கும்பல்கள், குண்டர் கும்பல்கள் போன்றவற்றின் தொடர்பில் வழக்கு விசாரணை ஏதுமின்றி நபர்களை குற்றவியல் (தற்காலிக நிபந்தனைகள்) சட்டத்தின்கீழ் (சிஎல்டிபிஏ) தடுத்து வைப்பதும் இதில் அடங்கும் என்று ஏப்ரல் 7ஆம் தேதியன்று நடைபெற்ற சமூக நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் கூறினார் அவர்.
இலக்குடன் இயங்கக்கூடியது சட்டம் என்பதையும் பாதுகாப்பு அம்சங்கள் நடப்பில் உள்ளன என்பதையும் மக்கள் அறிந்துள்ளனர் என்றார் திரு சண்முகம்.
இருப்பினும், அரசாங்கம் அதன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அதன் நற்பெயர் சேதமடைவதுடன் தேர்தலிலும் பாதிப்பு தென்படும் என்றார் அமைச்சர்.
இந்த ‘சிஎல்டிபிஏ’, பிரிவு 55 என்றும் அறியப்படுகிறது. சிங்கப்பூரின் குண்டர் கும்பல் பிரச்சினையை எதிர்கொள்ள 1955ஆம் ஆண்டில் இச்சட்டம் இயற்றப்பட்டது.
பழிவாங்குதலுக்குப் பயந்து ஆதாரமளிக்கச் சாட்சிகள் முன்வராதபோது வழக்கு தொடர இயலாது. அவ்வேளையில் பிரிவு 55ஐ பயன்படுத்த முடிந்தது.
இன்று, குண்டர் கும்பல் நடவடிக்கைகள், உரிமமின்றிக் கடன் அளித்தல், போதைப் பொருள் கடத்தல், ஆள்கடத்தல், சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்புகள் ஆகியவற்றின் தொடர்பான குற்றங்களுக்கு இந்தப் பிரிவு பயன்படுத்தப்படுகிறது.
இதன்படி ‘சிஎல்டிபிஏ’யின்கீழ் தடுப்புக்காவல் ஆணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர், 12 மாதங்கள் வரை தடுத்து வைக்கப்படலாம். காவல்துறை கண்காணிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டோர் மூன்று ஆண்டு வரை காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்படலாம்.
இந்நிலையில், ஏப்ரல் 3ஆம் தேதி சட்டம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இத்துடன் ‘சிஎல்டிபிஏ’ 15 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தால் தங்களின் குடும்பத்தாருக்கு ஆபத்து நேரும் என்று சாட்சிகள் பயந்த சூழல்களுக்கு இத்தகைய வழக்கமான சட்டபூர்வ முறைகள் பொருந்தவில்லை என்றும் அதனால் இச்சட்டம் முதன்முதலில் இயற்றப்பட்டது என்றும் திரு சண்முகம் ஏப்ரல் 7ஆம் தேதி கூறினார்.
பாதுகாப்பு, குறைந்த எண்ணிக்கை குற்றங்கள் ஆகிய அம்சங்களில் மற்ற நாடுகளுக்கு சிங்கப்பூர் முன்னுதாரணமாக விளங்கவேண்டும் என்பதைக் காலப்போக்கில் நாட்டின் சட்டங்கள் உறுதிசெய்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.