தெம்பனிஸ் வட்டாரக் கூட்டுரிமைக் குடியிருப்பில் உள்ள சூடேற்றப்பட்ட நீச்சல் குளத்தில் 73 வயது முதியவர் ஒருவர் மூழ்கி மாண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் ஏப்ரல் 8ஆம் தேதி ‘டிரேஷர் அட் தெம்பனிஸ்’ கூட்டுரிமைக் குடியிருப்பில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
முதியவரின் மரணத்தில் சந்தேகப்படும்படி ஏதும் இல்லை என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதியவர் ஒருவர் சூடேற்றப்பட்ட நீச்சல் குளத்தில் மூழ்கியதாக காலை 10.30 மணி அளவில் தகவல் கிடைத்தது என்று காவல்துறை கூறியது.
முதியவர் குளத்திலிருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
அப்போது அவர் சுயநினைவின்றி கிடந்ததாகவும் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.