பாவனைப் பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்ட போலி வெடிபொருளைப் பாதுகாவல் அதிகாரி ஒருவர் அப்புறத்தப்படுத்த தவறியதால், காவல்துறை தேவையற்ற புலனாய்வை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.
துரேந்திரன் விக்னேஷ் வெங்கட்ராமன் எனும் அந்த 46 வயது ஆடவர் காவல்துறை விசாரணையின்போது தாம் தமது வேலையிடத்தை விட்டுச் சிறிது நேரமே சென்றிருந்ததாகப் பொய் கூறினார். ஆனால், அவர் அவ்விடத்தை விட்டு ஐந்து மணிநேரத்துக்குமேல் சென்றிருந்தார்.
போலி வெடிபொருளை துரேந்திரன் அப்புறப்படுத்தத் தவறியதால், அந்தப் பொருளைப் பார்த்து மற்றொருவர் அதை வெடிபொருள் என நினைத்து காவல்துறையை அழைத்தார். ஜனவரி 5ஆம் தேதி அங் மோ கியோ தொழிற்பூங்கா 2ல் உள்ள சிங் தொழிலியல் வளாகத்துக்கு விரைந்த காவல்துறையின் பல்வேறு பிரிவினர் அது போலியான வெடிபொருள் என்று உறுதிப்படுத்தப்படும் வரை 100க்கு மேற்பட்டவர்கள் அந்த வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது, பொதுத் துறை ஊழியரிடம் தவறான தகவல்களைக் கூறியது, சரியான காரணங்கள் இன்றி வேலையிடத்தை விட்டுச் சென்றது போன்ற குற்றச்சாட்டுகள் ஏப்ரல் 9ஆம் தேதியன்று துரேந்திரன் மீது சுமத்தப்பட்டன.
ஒரு பாதுகாவல் நிறுவனம் நடத்திய பாவனைப் பயிற்சிக்குப் பிறகு, ஜனவரி 5ஆம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் அந்த வெடிபொருளை அங்கிருந்து அகற்றும் பணி அந்தத் தொழிற்பேட்டையில் இரவுநேரப் பணியில் இருந்த துரேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் துரேந்திரன் ஜனவரி 4ஆம் தேதி இரவு தனது வேலையிடத்திலிருந்து வெளியேறி ஆக்ஸ்லி டவரில் தன் நண்பர்களைச் சந்தித்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறின. ஜனவரி 4ஆம் தேதி இரவு 11.20 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 5 மணி வரை துரேந்திரன் தனது வேலையிடத்தில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.
துரேந்திரனின் வழக்கு ஏப்ரல் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பொதுத் துறை ஊழியரிடம் பொய்த் தகவல் கொடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு ஆறு மாதங்கள் வரையிலான சிறை, $5,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.