சாங்கி விமானநிலையக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 15 ஆண்டு காலம் பணியாற்றிய லீ சியாவ் ஹியாங் ஜூலை 1ஆம் தேதி அந்தப் பதவியில் இருந்து விலக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்தப் பொறுப்பை யாம் கம் வெங் ஏற்பார் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) தனது அறிக்கையில் குறிப்பிட்டது. திரு யாம், 59, தற்போது குழுமத்தின் விமான நிலைய மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவராக உள்ளார். சாங்கி ஈஸ்ட் புரொஜெக்ட் என்னும் திட்டத்தை அவர் வழிநடத்தி வருகிறார்.
சாங்கி விமான நிலைய அனைத்துலகப் பிரிவு, ஜுவல் சாங்கி விமான நிலைய மேம்பாட்டுப் பிரிவு ஆகியவற்றின் இயக்குநர் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்தும் திரு லீ, 54, விலக இருக்கிறார்.
இந்தப் பிரிவு சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முதலீடு மற்றும் ஆலோசனைப் பணியை மேற்கொள்கிறது.
சாங்கி விமான நிலையக் குழுமமும் கேப்பிட்டாலேண்ட் குழுமமும் இணைந்து நடத்தும் ஜுவல் சாங்கி விமான நிலைய மேம்பாட்டுப் பிரிவின் புதிய தலைவர் உரிய நேரத்தில் அறிவிக்கப்படுவார் என்று குழுமத்தின் பேச்சாளர் ஐவன் டான் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் கூறினார்.
கடந்த 2009 ஜூலை 1ஆம் தேதி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் பெற்ற திரு லீ விமான நிலையத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கண்டவர். குறிப்பாக, திரு லீயின் பதவிக் காலத்தில் 2017ஆம் ஆண்டு சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையமும் 2019ஆம் ஆண்டு ஜுவல் விமான நிலையமும் திறக்கப்பட்டன.