கடல்நீரின் மேற்பரப்பில் பறக்கக்கூடிய ஏர்ஃபிஷ் விமானம் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் சோதித்துப் பார்க்கப்பட உள்ளது. சாங்கி வட்டாரத்தை ஒட்டிய கடல்பகுதியில் மாதத்திற்கு இரு முறை அந்தச் சோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த விமானத்தை ‘எஸ்டி என்ஜினியரிங் ஏர்எக்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
தொழில்நுட்ப, பொறியியல் குழுமமான எஸ்டி என்ஜினியரிங்கும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட புதிய நிறுவனமான பெலுகாவும் இணைந்து இந்நிறுவனத்தை உருவாக்கி உள்ளன.
ஏர்ஃபிஷ் விமானத்தின் சோதனை குறித்து செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) சிங்கப்பூர் கடல்துறை துறைமுக ஆணையமும் ‘எஸ்டி என்ஜினியரிங் ஏர்எக்ஸ்’ நிறுவனமும் இணைந்து அறிவித்தன.
விமானத்தைச் சோதித்துப் பார்ப்பதற்கான இடத்தை தாங்கள் அடையாளம் காண இருப்பதாகவும் அவை கூறின.
தீவுகளுக்கு இடையிலான கடல்துறைப் பயணங்களுக்கு இந்த விமானம் பயன்படுத்தப்படும்.
சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவின் பாத்தாம் அல்லது பிந்தானுக்கும் இடையிலான பயணத்துக்கும் அவை பயன்படும் என்று எஸ்டி என்ஜினியரிங் ஏர்எக்ஸ் கூட்டு நிறுவனத்தின் பொது மேலாளர் லியோன் டான் தெரிவித்து உள்ளார்.
‘ஏர்ஃபிஷ்8’ என்னும் விமானம் ஒன்றை இயந்திரம், இரட்டை இயந்திரம் கொண்டவையாக இருக்கும். அவ்விரண்டு வகையும் சோதிக்கப்படும். அந்த விமானத்தில் இரு சிப்பந்திகளும் ஆறு முதல் எட்டு பயணிகளும் பயணம் செய்யலாம்.
சிங்கப்பூர் கடல்துறை வாரத்தையொட்டி, இந்த விமானம் ஏப்ரல் 13ஆம் தேதியும் 14ஆம் தேதியும் மரினா சௌத் பியரில் காட்சிக்கு வைக்கப்படும்.