பிரிந்து வாழும் மனைவி, தங்களின் 12 வயது மகனை வீடுவரை வந்துவிடத் தவறியதால் ஆத்திரமடைந்த 48 வயது ஆடவர் ஒருவர் அந்த மகனையே தாக்கினார்.
சமையல் பானையைக் கொண்டு மகனை ஆடவர் தாக்கியதுடன் உலோக பேஸ்பால் மட்டையைக் கையில் ஏந்திச் சிறுவனைக் கொன்றுவிடுவதாகவும் அவர் மிரட்டினார்.
ஆடவருக்கு ஏப்ரல் 11ஆம் தேதி இரண்டு மாத, ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றம் நடந்தபோது ஆடவர் வீவக வீடு ஒன்றில் வசித்ததாகவும் வீடு மகனின் பள்ளிக்கு அருகில் இருந்ததால் அந்த மகன் வாரநாள்களில் தன்னுடன் இருந்ததாகவும் அறியப்படுகிறது.
மனைவி வேறோர் இடத்தில் வசித்துவந்ததாகவும் மகன் அவருடன் வார இறுதிகளில் தங்கி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி ரமலான் மாதத்தின்போது தாயும் மகனும் வெளியே இருந்தபோது, அன்று மாலை சேர்ந்து நோன்பு துறக்கலாம் என்று மகனுக்கு அந்த ஆடவர் குறுந்தகவல் அனுப்பியிருந்தார்.
மகன் மாலை 7 மணியளவில் தந்தையின் வீட்டுக்குத் தனியே வந்தபோது, தன் மனைவி வீடுவரை மகனை வந்துவிடவில்லை என்பதை ஆடவர் உணர்ந்தார்.
கோபத்தில் மகனை ஆடவர் தாக்கியதை அடுத்து சிறுவனுக்கு இடது கை, மேல் முதுகு, மார்புப் பகுதிகளில் காயம் ஏற்பட்டது.