ஹண்டர் கவச வாகனத்துக்கு சாயம் பூச உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடை அணிந்து வேலை செய்யும் ஊழியருக்கு அந்தப் பணி இரண்டு அல்லது மூன்று நாள்கள் பிடிக்கும்.
ஆனால், தற்பொழுது இந்த வேலையை இயந்திர மனிதனின் கைகள் அதில் பாதி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரத்தையே எடுத்துக்கொள்கிறது.
அது மட்டுமல்லாது குறைந்த அளவில் சாயம் வீணாவதோடு சாயம் பூசுவதைத் துல்லியமாகவும் இந்த இயந்திர மனிதன் செய்கிறது. அத்துடன், இதுவரை சாயம் பூசிவந்த ஊழியர்கள் தற்பொழுது அந்த இயந்திர மனிதனை திட்டமிட்டு இயக்கி உடல் இறுக ஆடை அணியாமல் தூரத்தில் நின்றவாறே இயக்குகின்றனர்.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ‘சிடிசி’ தனது நிறுவன பயிற்சித் திட்ட நிதியுதவித் திட்டத்தின்கீழ் உற்பத்தித்திறனை உயர்த்த, வேலைகளை மறுவடிவமைக்க, ஊழியர் திறனை மேம்படுத்த, நிதியுதவி அளிக்கும் நான்கு திட்டப் பணிகளில் எஸ்டி என்ஜினியரிங் லேண்ட் சிஸ்டம்ஸ் திட்டமும் ஒன்று.
இந்த நிதியுதவித் திட்டம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமானது. இதற்கு அரசு $100 மில்லியன் நிதியை வழங்கியுள்ளது.
இந்த நிதியுதவி பெற நிறுவனங்கள் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் வேலைவாய்ப்பு, வேலைத்திறன் பயிற்சிக் கழகத்திடம் விண்ணப்பிக்கலாம். இதில் அந்த நிறுவனங்கள் தங்கள் திட்டப் பணிகளுக்கு ஆகும் செலவில் 70 விழுக்காடு வரை நிதியுதவி பெறலாம்.
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் இந்தத் திட்டம் தொடர்பான தகவல், என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் ஜாலான் பூன் லேயில் உள்ள எஸ்டி என்ஜினியரிங் லேண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) வருகை அளித்தபோது வெளியிடப்பட்டது. மே மாதம் தொழிலாளர் தினக் கொண்டாட்டத்துக்கு முன் இத்தகவல் வந்திருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்தத் திட்டத்தின் வாயிலாக இவ்வாண்டு மார்ச் மாதம் 150 நிறுவனங்களைச் சேர்ந்த 3,062 ஊழியர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், தங்கள் வருடாந்தர ஊதிய உயர்வு, வாழ்க்கைத் தொழில் முன்னேற்றம் ஆகியவற்றைத் தாண்டி கூடுதலாக 5 விழுக்காடு ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.