ஊழியர்களுக்கு ஊதியம் தரவில்லை எனக்கூறி ‘இமார்ட்24’ எனப்படும் தென்கொரிய அக்கம்பக்க கடைமீது புகார் வந்துள்ளது.
இதையடுத்து, அதன்மீது விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளித்த மனிதவள அமைச்சின் சச்சரவுகளுக்கு சமரசத் தீர்வு காணும் முத்தரப்பு கூட்டணி அமைப்பு, தன்னிடம் ‘இமார்ட்24’ அக்கம்பக்க கடையின் 15 முன்னாள் சிங்கப்பூர் ஊழியர்கள் புகார் அளித்திருப்பதாகக் கூறியது.
இதில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தான் உதவி வருவதாகவும் தற்பொழுது 5 ஊழியர்களுடன் ‘இமார்ட்24’ சமரசத் தீர்வு கண்டுள்ளது என்றும் அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
“மற்ற ஊழியர்கள் தொடர்பான புகாரில் சமரசப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றும் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
மேலும், இதில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு தேவைப்படுமானால், அவர்கள் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் வேலைவாய்ப்பு, வேலைத்திறன் பயிற்சிக் கழகத்தை அணுகலாம் என்றும் அது கூறியது.