சிறாரை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது சிங்கப்பூர் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொண்டது.
இதைத் தொடர்ந்து தங்களது திறந்த மேனியைக் காட்டும் புகைப்படங்களைத் தர சிறாரை ஊக்குவித்ததாகக் கூறப்படும் ஹாங்காங் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் தொடர்பில் மொத்தம் 272 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
பிப்ரவரி 26ஆம் தேதிக்கும் மார்ச் 29ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சோதனை நடவடிக்கையில் சிங்கப்பூர் காவல் துறை, சிங்கப்பூர் குற்றவியல் புலனாய்வுத் துறை, ஹாங்காங், தென்கொரிய காவல்துறையினர் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் மொத்தம் காவல்துறை அதிகாரிகளால் மூன்று நாடுகளில் 236 இடங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஓர் ஆசிரியர், ஒரு சமையல்காரர், ஒரு தொழில்நுட்பர், ஒரு ஓய்வுபெற்றவர் ஆகியோர் அடக்கம் என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஹாங்காங் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பள்ளியில் பெரும்பாலும் நிர்வாகப் பொறுப்பே அளிக்கப்பட்டிருந்ததாக ஹாங்காங் இணைய குற்ற காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த தற்காலிக மூத்த கண்காணிப்பாளரான ஹுவி யீ வாய் தெரிவித்ததாக சௌத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாள் கூறியது.
“இதில் அந்த சந்தேக நபர் தனது நடவடிக்கையின் ஒரு பகுதியாக சமூக வலைத்தளங்களில் சிறாரை அணுகி அவர்களுடன் பேச்சுக் கொடுப்பதில் தொடங்கி அவர்களின் நன்மதிப்பைப் பெறுவார்.
“பின்னர் அவர்களின் ஆர்வத்தைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் திறந்த மேனிப் படங்களை தமக்கு அனுப்புமாறு கோருவார்,” என்று அந்த மூத்த ஹாங்காங் காவல்துறை அதிகாரி விளக்கினார்.
சிறார் ஆபாசப் படங்களை எடுக்க 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களை தூண்டிய சந்தேகத்தின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.