செம்பவாங்கில் வெளிநாட்டு ஊழியர்களுக்காகப் புதிதாகத் திறக்கப்பட்டு இருக்கும் பொழுதுபோக்கு நிலையம் அரசு சாரா அமைப்புகளை ஒன்றுதிரட்டுகிறது.
ஊழியர்களுக்குச் சேவையாற்றும் அரசு சாரா அமைப்புகளுக்குத் தனிப்பட்ட வசதிகளை அளிக்கும் முதல் நிலையம் இது.
அந்த அமைப்புகளுள் ஒன்றான ‘இட்ஸ்ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ் அண்ட் பேஷன் டு செர்வ்’, ஏப்ரல் 14ஆம் தேதி பொழுதுபோக்கு நிலையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்தது.
அந்த நிலையத்தில் ஊழியர்களுக்குப் பொருத்தமான நிகழ்ச்சிகளை அந்த அமைப்பு நடத்தும்.
வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சேவையாற்ற இங்குள்ள ஒன்பது பொழுதுபோக்கு நிலையங்களில் செம்பவாங் நிலையம் மட்டுமே நிகழ்ச்சிகளை நடத்த அரசு சாரா அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதன் காரணமாக செம்பவாங் நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த தமது அமைப்புக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக ‘இட்ஸ்ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ் அண்ட் பேஷன் டு செர்வ்’ அமைப்பின் நிறுவனர் தீபா சுவாமிநாதன் தெரிவித்து உள்ளார்.
ஆங்கில மொழி வகுப்புகள், விழாக்கால சந்தை ஆகியவற்றோடு வெளிநாட்டு ஊழியர்களுக்கான உடலியக்க சிகிச்சைக்கான அமர்வுகளையும் அந்த நிலையத்தில் நடத்த முடியும் என்றார் அவர்.
செம்பவாங் பொழுதுபோக்கு நிலைய அதிகாரபூர்வத் திறப்பு நிகழ்வில் பங்கேற்ற மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், நிலையம் அமைக்கப்பட்டு இருக்கும் விதமும் அங்கு நிலவும் அமைதியான சூழலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவாக இருக்கிறது என்றார்.
அந்த நிலையம் 27,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குச் சேவையாற்றக்கூடியது என்றும் குளிரூட்டி வசதிகளுடனான பல்வேறு பயிற்சி அறைகள் அங்கு இடம்பெற்று இருப்பது சிறப்புக்குரியது என்றும் டாக்டர் கோ தெரிவித்தார்
ஏறக்குறைய 4,000 சதுர மீட்டரில், அதாவது காற்பந்துத் திடலின் பாதி அளவுக்குமேல் உள்ள பரப்பளவில் பொழுதுபோக்கு நிலையம் அமைந்துள்ளது.
மேலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடத்தில் அது நிறுவப்பட்டு உள்ளது.
1963ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட அந்தக் கட்டடத்தில் ‘ஆகி வெஸ்டன்’ என்னும் பிரிட்டிஷ் அறநிறுவனம் முதன்முதலாகக் குடியேறியது. இங்கிலாந்துக்கு வெளியே அந்த அறநிறுவனம் அப்போது கால்பதித்த முதல் கிளை அது.