சிங்கப்பூரின் புதிய அத்தியாயத்தை எழுத தம்முடனும் தமது குழுவினருடனும் இணைந்து பணியாற்றுமாறு சிங்கப்பூரர்களுக்கு துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் அழைப்பு விடுத்து உள்ளார்.
சிங்கப்பூரின் நான்காம் பிரதமராக மே 15ஆம் தேதி லாரன்ஸ் வோங் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் சமூக ஊடகத்தில் காணொளித் தகவல் ஒன்றைப் பதிவேற்றினார். சிங்கப்பூரர்கள் தம்மை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், “ஒன்றிணைந்த மக்களாக நாம் நமது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வோம்,” என்று அந்தப் பதிவில் தெரிவித்தார்.
“எனக்கு வழங்கப்பட்டு உள்ள பொறுப்பை பணிவுடனும் ஆழ்ந்த கடமை உணர்ச்சியுடனும் ஏற்றுக்கொள்கிறேன். சிறப்பாகப் பணியாற்றத் தேவையான எல்லா முயற்சிகளையும் அளிக்க உறுதி கூறுகிறேன்.
“எனது ஆற்றலின் ஒவ்வொரு துளியையும் நாட்டுக்காகவும் நமது மக்களுக்காகவும் அர்ப்பணிப்பேன். உங்களது விருப்பங்கள் எனது செயலை ஊக்குவிக்கும். உங்களது அக்கறைகள் எனது முடிவுகளை வழிநடத்தும்,” என்று திரு வோங் குறிப்பிட்டு உள்ளார்.