உலகளாவிய நிலையில் நிலவும் பதற்றநிலை, பூசல்கள் ஆகியவற்றுக்கு முழுமையான தீர்வைச் சிறிய நாடுகளால் கொண்டு வர முடியாது. இருப்பினும், அவற்றைத் தணிக்கவும் அவற்றுக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த ஊக்கமளிக்கவும் சிறிய நாடுகள் முயற்சி செய்யலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் ஏப்ரல் 15ஆம் தேதியன்று தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சனுடனான செய்தியாளர் கூட்டத்தின்போது பிரதமர் லீ இக்கருத்தை முன்வைத்தார்.
இந்தச் செய்தியாளர் கூட்டம் இஸ்தானாவில் நடைபெற்றது.
உலகப் போர் வெடிக்கும் அபாயம் இருக்கிறதா என்று பிரதமர் லீயிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த திரு லீ, “உலகப் போர் வெடிக்கும் அபாயம் இல்லை என நம்புகிறேன். ஆனால் இவ்வுலகில், குறிப்பாக மத்திய கிழக்கில் பல பிரச்சினைகள் உள்ளன,” என்று கூறினார்.
மத்திய கிழக்கில் நிலவும் பிரச்சினைகளுக்குக் குறுகியகாலகட்டத்தில் தீர்வு கண்டுவிட முடியாது என்றபோதும் சிறிய நாடுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றார் அவர்.
“பதற்றநிலையைத் தணிக்க சிறிய நாடுகள் முயற்சி செய்யலாம். அமைதி பேச்சுவார்த்தை நடைபெற ஊக்கமளிக்கலாம். ஆனால் அக்டோபர் 7ஆம் தேதியன்று நடந்த சம்பவத்தையும் அதன் காரணமாக ஏற்பட்ட பின்விளைவுகளையும் கருத்தில் கொள்ளும்போது இதைச் செய்வது சவால்மிக்கதாக இருக்கும்,” என்று திரு லீ கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி பலரைப் பிணை பிடித்தது. அதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன் சிங்கப்பூருக்கு மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஏப்ரல் 14ஆம் தேதியன்று சிங்கப்பூர் வந்தடைந்தார்.
சிங்கப்பூருக்கும் நியூசிலாந்துக்கும் இடையே பல பொதுவான நிலைப்பாடுகள் இருப்பதைச் சுட்டிய திரு லக்சன், இருநாடுகளும் அனைத்துலக, மனிதாபிமான சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாகக் கூறினார்.
நியூசிலாந்துப் பிரதமராக 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திரு லக்சன் பதவி ஏற்றார்.
நியூசிலாந்துப் பிரதமராக அவர் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறை.
இந்நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் தொடர்பான வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை சிங்கப்பூரும் நியூசிலாந்தும் தொடங்கும் என்று ஏப்ரல் 15ஆம் தேதியன்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
நெருக்கடிநிலையின்போது விநியோகச் சங்கிலிக்கு இடையூறு ஏற்படாதிருக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருநாடுகளுக்கும் இடையிலான மேம்படுத்தப்பட்ட பங்காளித்துவம் விரிவுப்படுத்தப்படுவதாக திரு லீயும் திரு லக்சனும் கூறினர். பங்காளித்துவ விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக விநியோகச் சங்கிலி, இருநாடுகளுக்கும் இடையிலான இணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.