சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டுக்குள் அமையவிருக்கும் புதிய கடல்துறை எரிசக்தி பயிற்சி நிலையம், சுத்தமான கடல்துறை எரிபொருள்களைக் கையாள கடல்துறை ஊழியர்களுக்கு தகுந்த பயிற்சியளிக்கும்.
கடல்துறை, துறைமுக ஆணையத்துடன் (எம்பிஏ), பிரதான கடல்துறை இயந்திர தயாரிப்பாளர்கள், வர்த்தகச் சங்கங்கள், ஊழியர் சங்கங்கள், உயர்கல்வி நிலையங்கள் போன்ற 22 பங்காளித்துவ அமைப்புகள் இந்தப் புதிய கடல்துறை எரிசக்தி பயிற்சி நிலையத்தை அமைக்கவிருக்கின்றன.
இப்போது முதல் 2030கள் வரை கிட்டத்தட்ட 10,000 கடலோடிகள், கடல்துறை ஊழியர்கள் இந்த நிலையத்தில் பயிற்சி பெறுவார்கள் என்றும் அதன் பயிற்சிகளும் அதன் தொடர்பான பயிற்சி வசதிகளும் செயல்படத் தொடங்கி விட்டன என்றும் கூறியது.
சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி மையத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி சிங்கப்பூர் கடல்துறை வாரத்தைத் தொடங்கி வைத்து பேசிய போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், இந்தப் புதிய நிலையம் சிங்கப்பூரை இந்த வட்டாரத்தின் முதன்மை கடல்துறை பயிற்சி நிலையம் என்ற சிறப்புக்கு அருகில் கொண்டு செல்லும் என்றும் இந்நிலையத்தில் மாற்று எரிபொருளுடன் பணிபுரிய தேவையான திறன்களைக் கடலோடிகள் பெறலாம் என்றார்.
சிங்கப்பூரில் பல்வேறு இடங்களில் அமையவிருக்கும் இந்தப் பயிற்சி வசதிகளில் புதிய இரட்டை எரிபொருள் கடல்துறை இயந்திர பாவனைக் கூடமும் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் பாதுகாப்பாகக் கையாளுதல், கப்பல்களில் எரிபொருள் நிரப்புதல், மாற்று எரிபொருளைப் பயன்படுத்துதல் குறித்த சம்பவ மேலாண்மை போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படும் என்று எம்பிஏ தெரிவித்தது ஏப்ரல் 15ஆம் தேதி தெரிவித்தது.
கடல்துறை ஊழியரணிக்குத் தேவைப்படும் ஆற்றல்களை அதிகரிக்க, 2023 முற்பகுதியில் அமைக்கப்பட்ட முத்தரப்பு ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின்படி இந்த பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.
சிங்கப்பூர் கடல்துறை வாரத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய திரு சீ, 2024 முதல் காலாண்டில் சிஙகப்பூர் துறைமுகங்களின் தொடர் வளர்ச்சி பற்றி கருத்துரைத்தார்.
ஆண்டு அடிப்படையில் பார்க்கையில், சிங்கப்பூர் துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை 7.3% அதிகரித்து, 792.62 மில்லியன் மொத்த டன்கள் என்று பதிவானது. அதேபோல் ஆண்டு அடிப்படையில் பார்க்கும்போது, நமது துறைமுகங்களில் கையாளப்பட்ட கொள்கலன்களின் விகிதம் 10.7% அதிகரித்து 9.97 மில்லியன் கப்பல் கொள்கலன்கள் எனப் பதிவானது என்று எம்பிஏ விவரித்தது.