சிங்கப்பூரில் $18 மில்லியனுக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதற்காக அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்ட அமெரிக்கரான 51 வயது மைக்கல் பிலிப் அட்கின்ஸ், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
முன்பு, 1,300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் பணத்தை நம்பிக்கை மோசடி செய்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில், அக்குற்றச்சாட்டைத் திங்கட்கிழமை ( ஏப்ரல் 15) நீதிமன்றத்தில் அட்கின்ஸ் ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ‘ஆரியஸ் கேப்பிட்டல்’ நிறுவனத்தின் இயக்குநராக அட்கின்ஸ் பணியாற்றியபோது இக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.
அந்நிறுவனத்துடன் தொடர்புடைய அந்நியச் செலாவணி வர்த்தக மோசடித் திட்டத்தின் மூளையாக அட்கின்ஸ் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இக்குற்றத்தை 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, ‘ஆரியஸ் கேப்பிட்டல்’ நிறுவனம் பொதுமக்களுக்கு அந்நியச் செலாவணி வர்த்தகத் திட்டங்கள் போன்ற சேவைகளை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக வாடிக்கையாளர்கள் அளித்த பணத்தை அதில் முதலீடு செய்யாமல் $14.7 மில்லியனுக்கும் அதிகமான பணம் பிற நோக்கங்களுக்காக அந்நிறுவனம் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்டது.
வங்கி சேவை உரிமத்தைப் பெறுவதற்காக ‘ஆரியஸ் கேப்பிட்டல்’ நிறுவனம் வர்த்தகச் சேவையை நிறுத்துவதாக 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
இது தொடர்பாக, அந்நிறுவனத்தையும் அதன் இயக்குநர்களையும் தொடர்புகொள்ள முடியாமல் போகவே வாடிக்கையாளர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
2014ஆம் ஆண்டு அட்கின்ஸ் கைது செய்யப்பட்டார். பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் அமெரிக்காவுக்குத் தப்பியோடினார். அங்கிருந்து சிங்கப்பூருக்கு 2023ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி நாடு கடத்தப்பட்டார்.
அட்கின்சுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.