பருவநிலை மாற்றம் , நீர், பல்லுயிர் இழப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சமாளிப்பதன் மூலம் பொருளியல் ரீதியாக பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அந்தக் கருத்தை அதிபர் தர்மன் கூறினார்.
இந்த மூன்று பிரச்சினைகளையும் தனித்தனியாக கையாள்வதைவிட ஒன்றாகக் கையாண்டால் சமூகத்தில் அதன் நன்மைகள் கூடுதலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றத்தால் தண்ணீருக்கான பற்றாக்குறை ஏற்படுகிறது, தூய்மைக்கேட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது என்றார் அதிபர்.
2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக மாற்ற வேண்டும் என்றால் அதற்கு பல டிரில்லியன் டாலர் செலவாகும் என்று திரு தர்மன் சுட்டிக்காட்டினார்.
சுற்றுச்சூழல் தொடர்பாகத் தற்போது எடுக்கும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் பயன் தரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.