சாங்கி விமான நிலைய டிரான்சிட் பகுதியில் கிட்டத்தட்ட $200 பெறுமானமுள்ள ஒப்பனைப் பொருள்களையும் $800க்குமேல் மதிப்புடைய இடைவாரையும் திருடியதன் சந்தேகத்தின் பேரில் 38 வயது மாது ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பிப்ரவரி 21ஆம் தேதி சாங்கி விமான நிலைய டிரான்சிட் பகுதியில் இரு கடைகளில் திருட்டு நடைபெற்றது குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாக திங்கட்கிழமை (ஏப்ரல் 18) காவல்துறை தெரிவித்தது.
சுற்றுப்பயணி என நம்பப்படும் அந்தச் சந்தேக நபரை விசாரணைக்குப் பிறகு காவல்துறை அடையாளம் கண்டது. எனினும், பொருள்கள் மாயமான சிறிது நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து அந்த மாது விமானத்தில் புறப்பட்டுச் சென்றதால் அவரைப் பிடிக்க முடியவில்லை.
இந்த மாதம் சிங்கப்பூர் திரும்பியதும் அவர் கைது செய்யப்பட்டார்.
அந்த மாது கைது செய்யப்பட்ட தினம், சாங்கி விமான நிலையத்தில் $400க்குமேல் பெறுமானமுள்ள ஒப்பனைப் பொருள்களையும் அவர் திருடியதாகக் கூறப்படுவதைக் காவல்துறை அதன் முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்தது.
அந்த மாது மீது செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) நீதிமன்றத்தில் திருட்டுக் குற்றச்சாட்டு சுமத்தப்படவிருந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழாண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.