புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளிக்கு அருகே காரால் மோதப்பட்ட 12 வயது மாணவி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இவ்விபத்து புக்கிட் பாத்தோக் சென்ட்ரலை நோக்கிச் செல்லும் புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 21ல் ஏப்ரல் 16ஆம் தேதி காலை 7.05 மணியளவில் நடந்ததாகக் காவல்துறை கூறியது.
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது மாணவி சுயநினைவுடன் இருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இச்சம்பவம் தொடர்பான காணொளி எஸ்ஜி ரோட் விஜிலாண்ட் - எஸ்ஜிஆர்வி/ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
போக்குவரத்து வழிகாட்டும் ஊழியர் கை அசைத்தபின் அந்த மாணவி ‘ஸீப்ரா கிராசிங்’ எனப்படும் பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான பகுதியில் ஓடுவதைக் காணமுடிகிறது.
‘ஹோண்டா வெசல்’ ரக வெள்ளை கார் மோதியதை அடுத்து அச்சிறுமி தூக்கி எறியப்பட்டதும் அதில் பதிவாகியுள்ளது.
பள்ளி ஆசிரியர்கள் உடனே அச்சிறுமியை நோக்கி ஓடிவந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஷின் மின் நாளேட்டிடம் கூறினார்.
இவ்விபத்து தொடர்பில் கார் ஓட்டுநரான 50 வயது ஆடவர் விசாரணையில் உதவிவருவதாகக் காவல்துறை கூறியது.