சமூகத் தோழமைச் சேவை முகவராகப் பாசாங்கு செய்து இச்சேவையை வழங்கும் பெண்களை ஏமாற்றிப் பணம் கொடுக்காமல் அவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆடவருக்கு ஏப்ரல் 16ஆம் தேதியன்று இரண்டு ஆண்டுகள், எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆள்மாறாட்டம், பெண்ணின் அந்தரங்கப் படங்களை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்தது ஆகியவை தொடர்பாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை 42 வயது சென் ஸெலின் ஒப்புக்கொண்டார்.
இந்தக் குற்றங்களைப் புரிந்தபோது சென் திருமணப் பந்தத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் தற்போதும் திருமணமானவராக இருக்கிறாரா என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்கள் தெளிவுப்படுத்தவில்லை.
தம்மால் பல வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்து வைக்க முடியும் என்று சமூகத் தோழமைச் சேவை வழங்கும் பெண்களிடம் சென் பொய் கூறினார்.
ஆனால் அதற்கு முன்பு அவர்களது ‘திறமை’யைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று அப்பெண்களிடம் சென் தெரிவித்தார்.
இதற்கு இணங்கி குறைந்த விலையில் அல்லது இலவசமாகச் சில பெண்கள் அவருடன் பாலியல் உறவு கொண்டனர்.
அப்பெண்களுடன் மீண்டும் இலவசமாகப் பாலியல் உறவு கொள்ள சென் கதை கட்டினார்.
உடல் எடையைக் குறைக்க வேண்டும், ‘திறன்’களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை போன்ற பல சாக்குப் போக்குகளை அப்பெண்களிடம் சென் கூறினார்.
2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பெண் ஒருவருடன் சென்னுக்குப் பழக்கம் ஏற்பட்டது.
அப்பெண் அப்போது வாடகைக்கு வீடும் தம்மீது அன்பு காட்ட காதலர் ஒருவரையும் தேடிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் சென்னின் காதலியானார்.
சென் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமது அந்தரங்கப் படங்களை அப்பெண் அவரிடம் அனுப்பிவைத்தார்.
இதையடுத்து, அப்பெண்ணின் அந்தரங்க காணொளிகள் அல்லது படங்களை எடுக்க சென் விரும்பினார். அதற்கு மறுப்பு தெரிவித்தால் இருவருக்கு இடையிலான பாலியல் ரீதியிலான உரையாடல்களை அப்பெண்ணின் முதலாளியிடம் காட்ட இருப்பதாக சென் மிரட்டினார்.
இந்த மிரட்டல்களுக்கு அப்பெண் பணிந்தார்.
அப்பெண்ணின் சக ஊழியர்களுடன் பாலியல் உறவு கொள்ள விரும்புவதாகவும் அவர்களைத் தமக்கு அறிமுகம் செய்துவைக்கும்படியும் சென் அப்பெண்ணை வற்புறுத்தினார்.
மனவுளைச்சலுக்கு ஆளான அப்பெண் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, சென் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தைக் காக்க அவர்களது பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.