தமிழும் இசையும், கவிஞர்களும் கானமும் என்ற பெயரில் லிஷா எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் சித்திரைப் புத்தாண்டு அன்று ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சிங்கப்பூரைச் சேர்ந்த கவிஞர்களைக் கௌரவிக்கும் வகையில் லிஷா இந்த ஆண்டு சித்திரைப் புத்தாண்டுக்காக புதிய முயற்சியாக 60 உள்ளூர்க் கவிஞர்களின் பதாகைகளை சிராங்கூன் சாலை முழுவதும் வைத்துள்ளது.
அறுபது உள்ளூர்க் கவிஞர்களைச் சிறப்பித்துப் பாராட்டுவதற்காக அவர்கள் எழுதிய கவிதைகளை லிஷா ஒரு புத்தகமாகத் தொகுத்து நிகழ்ச்சியில் வெளியிட்ட தருணம் முத்தாய்ப்பாக அமைந்தது.
“உள்ளூர்க் கவிஞர்களை நாம் போற்றுவதோடு அவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தையும் பொதுமக்கள் லிஷா அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக்கொண்டு படிக்கலாம். இந்தப் புதிய முயற்சியை நாங்கள் சித்திரைப் புத்தாண்டுக்காகக் கையாண்டது சிறப்பு மிக்கது,” என்று லிஷா தலைவர் ரெகுநாத் சிவா கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை கிளைவ் ஸ்திரீட்டில் அமைந்துள்ள பொலி திறந்தவெளியில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். வளாகமே நிறைந்த வண்ணம், ஆடல் பாடல் என மூன்று மணி நேரத்திற்குப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
“தாய்மொழி ஒருவரின் அடையாளத்தில் மிகப்பெரிய பங்காற்றுகிறது. சித்திரைப் புத்தாண்டு போன்ற நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவதன் மூலம் நாம் நம் மொழியைப் பாதுகாக்க முடிகிறது.
“அதற்கு அப்பாற்பட்டு தமிழ்மொழி விழாவையும் நாம் மறந்துவிடக்கூடாது. பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் நாம் கலந்துகொண்டு மொழியை வளர்க்க வேண்டும்,” என்று குமாரி இந்திராணி ராஜா தெரிவித்தார்.
குத்துவிளக்கேற்றி குமாரி இந்திராணி ராஜா கலை நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மற்றொரு சிறப்பு அம்சமாக தமிழ்மொழிக்காக அரிய தொண்டாற்றிய முனைவர் சுப.திண்ணப்பனுக்குப் பொன்னாடை போத்தி பிரத்தியேக லிஷா தமிழ்ப்பணி செம்மல் விருது வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகழ்பெற்ற இந்தியச் சொற்பொழிவாளர் இசைக்கவி திரு ரமணன், தமிழ்த் திரைப்படப் பாடல்களின் வழி தமிழ் இலக்கியம் பற்றிய சொற்பொழிவை ஆற்றினார்.
“இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன் மூலம் நாம் நம் மொழிப் புழக்கத்தை அதிகரிக்க முடிகிறது. வழக்கமாக நடைபெறும் ஆடல் பாடல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு கவிஞர்களைச் சிறப்பிக்கும் விதத்தில் நிகழ்ச்சியில் நூல் வெளியீடு நடைபெற்றதைக் கண்டது மகிழ்ச்சியாக இருந்தது,” என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான தர்ஷினி, 34, சொன்னார்.