‘சிங்கப்பூர் எப்சான் இன்டஸ்டிரியல்’ நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் தனது நடவடிக்கைகளில் சிலவற்றை குறைத்துக்கொள்ள உள்ளது.
அது தனது திட்டமிட்ட முடிவின் ஒரு பகுதியாக அவற்றை வெளிநாடுகளில் உள்ள எப்சான் நிறுவன மற்ற ஆலைகளுக்கு மாற்றிவிட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சிங்கப்பூர் ஆலையில் பணிபுரியும் கிட்டத்தட்ட 350 ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்சான் நிறுவனம் தனது அச்சு இயந்திரங்களுக்கும் திரைகளுக்கும் பெயர் பெற்றது. இந்த நிறுவனம் தற்பொழுது துவாசில் உள்ள தனது ஆலையின் நடவடிக்கைகளை 2027ஆம் ஆண்டுக்குள் குறைத்துக்கொள்ள உள்ளது. இந்த விவரங்களை அது ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிட்ட தனது அறிக்கையில் கூறியது.
ஜூரோங்கில் இயங்கும் எப்சான் நிறுவனத்தின் மத்திய கிடங்கு நடவடிக்கைகள் பாதிக்கப்படாது. அத்துடன், தென்கிழக்கு அசியாவின் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை கவனிக்கும் அதன் வட்டார தலைமை நிலையமும் இந்த மாறுதலால் பாதிக்கப்பட்ட மாட்டாது. அவற்றின் வழக்கமான நடவடிக்கைகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் யாவும் ஜப்பானில் உள்ள எப்சான் தலைமையக உத்தரவின்படி நடக்கின்றன என்றும் இவை எப்சான் நிறுவன உலகளாவிய உற்பத்தி உத்தியின் ஒரு பகுதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஏப்ரல் 19ஆம் தெரிவிக்கப்பட்டது.