இந்த ஆண்டின் சிங்கப்பூர் தோட்ட விழாவில், ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ‘ஃபுளோரல் வின்டோஸ்’ உலகக் கிண்ணப் போட்டி புதிய வடிவத்துடன் மீண்டும் இடம்பெறுகிறது.
இந்த ஆண்டுப்போட்டியில் சாதனை அளவாக 18 அனைத்துலக மலர் வடிவமைப்பாளர்கள் போட்டியிட உள்ளனர். அவர்களில் 13 வடிவமைப்பாளர்கள் இந்த விழாவிற்குப் புதியவர்கள்.
2024 ‘ஃபுளோரல் வின்டோஸ்’ உலகக் கிண்ணப் போட்டி, நேரடிப் போட்டி அம்சத்தை உள்ளடக்கும் என்றும், மலர் வடிவங்கள் உருவாக்கப்படுவதைப் பார்வையாளர்கள் நேரில் காணலாம் என்று ஏப்ரல் 20ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது.
ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை வடிவமைப்பாளர்கள், நீதிபதிகள், பார்வையாளர்கள் முன்னிலையில் ஆறு போட்டி அம்சங்களில் பங்கேற்பர்.
இந்த ஆண்டு விழாவில் எஸ்டோனியா, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதல் முறை பங்கேற்பாளர்கள் உட்பட ஐந்து கண்டங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்களில் பரந்த அளவிலான பாணிகள்,கலைநுட்பங்களைக் கண்டு ரசிக்கலாம்.
முதல் ஐந்து நிலைகளில் வரும் இறுதிப் போட்டியாளர்கள் ஆகஸ்ட் 5 அன்று இறுதி அங்கத்தில் பங்கேற்பர். கட்டணத்துடன் கூடிய அந்த இரவு உணவு நிகழ்வில் வெற்றியாளர் முடிசூட்டப்படுவார்.
2006ஆம் ஆண்டு முதல் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழா, நில வனப்பு, தோட்ட வடிவமைப்பாளர், மலர் ஆர்வலர்கள், தோட்டக்கலை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் திறமைகளை வெளிப்படுத்த ஒரு அனைத்துலகத் தளமாக செயல்படுகிறது. உள்நாட்டுத் தோட்டக்கலை நிபுணர்களுடன், உலகெங்கிலுமிருந்து விருது பெற்ற நிபுணர்கள் ஒன்றிணைந்து செயல்படும் விழா இது.
சிங்கப்பூர் தோட்ட விழா 2024 சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி மையத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும். விழா, இறுதிப்போட்டி இரவு உணவிற்கான நுழைவுச்சீட்டுகளை வாங்க: https://sgf.nparks.gov.sg/tickets-for-finals-dinner என்ற இணையப் பக்கத்திற்குச் செல்லலாம்.