ஸ்டெர்லைட் ரோட்டில் இதுவரை கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இயங்கிவந்த சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் (சிஃபாஸ்), அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் மிடில் ரோடுக்கு இடம் மாறவுள்ளது.
‘சிஃபாஸ்’ நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் தனது கலைவிழாவின் தொடக்கத்தை அது வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்திருக்கிறது.
250, 252 மிடில் ரோட்டில் புதிய வளாகம் அமையவிருப்பதாக அந்தக் கலைப்பள்ளியின் தலைமைத்துவக் குழுவினர், செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.
சிஃபாஸின் 75ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை ஒட்டி நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் புதிய வளாகம் பற்றிய விவரங்களும் அறிவிக்கப்பட்டன. ‘டிஎம்சி’ கல்வி நிலையம் பயன்படுத்திய அந்த இடத்தை அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சிஃபாஸ் வாடகைக்கு எடுக்கும் என்று அதன் நிர்வாக இயக்குநர் மேனகா கோபாலன் தெரிவித்தார்.
விரிவான வசதிகளைக் கொண்ட ஒளிப்படத் தயாரிப்பு இடம், ஒத்திகைக்கான இடங்கள், ஒளிப்பதிவுக் கூடம், மேடை நிகழ்ச்சிகளுக்கான இடங்கள் என இந்தியக் கலைகளுக்கான மையமாக இந்த வளாகம் திகழவிருப்பதாக சிஃபாஸ் கூறியது. இந்த மேம்பாடுகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
‘நாஃபா’ எனப்படும் நன்யாங் நுண்கலைக் கழகத்திற்கும் ‘லசால்’ கலைப்பள்ளிக்கும் அருகே அமையவுள்ள புதிய சிஃபாஸின் வளாகத்துடன் இணைந்து அந்த இடமே கலை மையமாக உருவாக இருக்கிறது.
மிடில் ரோட்டுக்கும் பிரின்செப் ஸ்திரீட்டுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் அமையவுள்ள புதிய வளாகத்திற்கு மாணவர்கள் வந்துபோவதற்கு மேலும் வசதியாக இருக்கும் என்றும் திருவாட்டி மேனகா கூறினார்.
இந்திய செவ்விசைக்கான ரசிகர் வட்டத்தைக் கடந்து, அத்தகைய இசையைக் கேட்டிராத மக்களையும் வரவேற்கும் விதமாகத் திறந்தவெளிப் பார்வையாளர் அரங்கும் இங்கு அமைய இருப்பதாக அவர் கூறினார்.
1949ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிஃபாஸ், 12 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டு தற்போது 2,000 உறுப்பினர்களையும் 30 ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், குச்சிப்புடி உள்ளிட்ட 18 வகையான கலைகள் இங்கு கற்பிக்கப்படுகின்றன.