வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் சிறுவர்களுக்காகப் புதிய, சிறிய நூலகம் திறக்கப்பட்டுள்ளது. ஜாமியா சிங்கப்பூரின் ஜேம்பேக்ட்@வெஸ்ட் கோஸ்ட்டில் நூலகம் அமைந்துள்ளது.
நூலகம் அனைவருக்காகவும் திறந்துவிடப்பட்டுள்ளது.
அங்கு மூன்றிலிருந்து 12 வயது வரையிலான சிறுவர்களுக்காக ஏறத்தாழ 500 நூல்கள் உள்ளன.
நூலகத்தின் திறப்பு விழா ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடைபெற்றது.
அதில் தேசிய வளர்ச்சி அமைச்சரும் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டெஸ்மண்ட் லீ கலந்துகொண்டார்.
“மின்னிலக்க உலகில் சிறார் இடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் அதில் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும் இம்மாதிரி நூலகங்களைத் திறப்பதன் மூலம் வாய்ப்புகள் கிடைக்கின்றன,” என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.
கிளமெண்டி வெஸ்ட் ஸ்திரீட் 2ல் அமைந்துள்ள புதிய நூலகம் திறக்கப்பட்ட நாளன்று ஏறத்தாழ 40 சிறுவர்கள் அங்குள்ள புதிய நூல்களை வாசித்து மகிழ்ந்தனர்.
மைக்ரோன் செமிகண்டக்டர் ஏஷியா நிறுவனத்தின் நிதி உதவியுடனும் ஜாமியா மறுவாழ்வு நிலையத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட தொண்டூழியர்களின் உதவியுடனும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.