தமது கட்சிக்காரரிடமிருந்து பணம் கையாடியதை முன்னாள் வழக்கறிஞரான 58 வயது சொராயா ஹஃப்சா இப்ராகிம் ஏப்ரல் 22ஆம் தேதியன்று ஒப்புக்கொண்டார்.
கட்சிக்காரரை ஏமாற்றிப் பறித்த $525,000க்கும் அதிகமான பணத்தை சொந்த செலவுக்காகவும் கடனை அடைப்பதற்காகவும் சொராயா பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
வழக்கறிஞராகச் செயல்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டும் சட்ட ஆவணங்களைத் தயாரித்து அவற்றுக்கான கட்டணத்தை வசூலித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கு மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சொராயா மீது சுமத்தப்பட்ட நம்பிக்கை துரோகக் குற்றச்சாட்டு தீர்ப்பளிக்கும்போது கருத்தில் கொள்ளப்படும்.
குறைவான அறிவுத்திறன் கொண்ட கட்சிக்காரரிடமிருந்து சொராயா பணம் கையாடியதாகக் கூறப்படுகிறது. எளிதில் பாதிக்கப்படக்கூடிய அந்த ஆடவர் பராமரிப்பாளரின் உதவியை நம்பியிருப்பவர் என்று தெரிவிக்கப்பட்டது. பராமரிப்பாளரின் கண்காணிப்பின்கீழ் அந்த ஆடவர் இருந்ததாக அறியப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஆடவரிடமிருந்து கையாடப்பட்ட பணம் அவரிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.