தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விபத்தில் மாண்ட மாணவி: மீளாத் துயரில் உற்றார் உறவினர், அஞ்சலி செலுத்திய தொடக்கக்கல்லூரி

3 mins read
69844074-0f90-4533-b940-a3c4e1764594
சாலை விபத்தில் மாண்ட தெமாசெக் தொடக்கக்கல்லூரி மாணவி அஃபிஃபா முனிரா முகம்மது அஸ்‌ரில். - படம்: இன்ஸ்டகிராம்
multi-img1 of 2

தெம்பனிஸ் சாலை விபத்தில் உயிரிழந்த 17 வயது அஃபிஃபா முனிரா முகம்மது அஸ்‌ரில், துடிப்பான இளம் பெண், ஆக்கபூர்வமான உணர்வுகளை அதிக அளவில் வெளிப்படுத்தியவர் என்று தெமாசெக் தொடக்கக் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் நினைவுகூர்ந்தனர்.

தெமாசெக் தொடக்கக் கல்லூரியும் சீடார் பெண்கள் பள்ளியும் அவரது சிறப்புகளையும் அவர் குறித்த நினைவுகளுடன் தத்தம் ஃபேஸ்புக் பக்கங்களில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தியுள்ளன.

தெம்பனிஸ் அவென்யூ 1க்கும் அவென்யூ 4க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் ஏப்ரல் 22ஆம் தேதி காலை நிகழ்ந்த விபத்தில் மாண்ட இருவரில் அஃபிஃபா ஒருவர்.

நெடுந்தொலைவு ஓட்டத்தில் பங்கெடுப்பதற்காக காலை 7 மணி அளவில் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியை நோக்கி அவரது தந்தை கார் ஓட்டிச் சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது. ஆறு வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. இதில் பலர் காயமடைந்தனர்.

பாசிர் ரிஸில் உள்ள அல்- இஸ்திஃபார் பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) நடந்த அஃபிஃபாவின் இறுதிச் சடங்கில் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பாசிர் ரிஸில் உள்ள அல்- இஸ்திஃபார் பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) நடந்த அஃபிஃபாவின் இறுதிச் சடங்கில் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அஃபிஃபாவின் மரணம் அவரது உறவினர்களையும் நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அஃபிஃபா மிகச் சிறந்த மாணவி என்று அவரது நண்பர்கள் புகழ்ந்தனர்.

2020ல் சீடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது தாம் படித்த மெரிடியன் தொடக்கப் பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு அஃபிஃபா உதவி, ஊக்கமளித்ததாக பாசிர் ரிஸ் வட்டாரத்தில் அஃபிஃபா வசித்த அதே குடியிருப்புக் கட்டடத்தில் வசிக்கும் 12 வயதுச் சிறுவன் ஒருவன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பகிர்ந்துகொண்டான்.

“நான் தொடக்கநிலை ஒன்றில் பயின்றபோது, ஆசிரியர்கள் பலர் அஃபிஃபாவைப் பாராட்டுவதைப் பார்த்திருக்கிறேன். அஃபிஃபா மீது அவர்களுக்கு நல்லதோர் அபிப்பிராயம் இருந்தது. அவர் தலைமையின்கீழ் பள்ளி மாணவர்கள் தேசிய கீதத்தைப் பாடினர், பற்றுறுதி எடுத்துக்கொண்டனர். அவர் மிகச் சிறந்த மாணவியாக இருந்தார் என்று சொன்னால் அது மிகையன்று,” என்று அஃபிஃபாவின் அண்டைவீட்டார் தெரிவித்தார். தற்போது மெரிடியன் தொடக்கப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் பயிலும் அந்த மாணவி, தமது பெயரைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அஃபிஃபாவின் மரணம் தங்களுக்குப் பேரதிர்ச்சியையும் மிகக் கடுமையான மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக அவரது உறவினரான திரு ஃபிர்தாவோஸ் தெரிவித்தார்.

அத்துடன், அஃபிஃபாவின் தந்தை திரு முகம்மது அஸ்‌ரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது சிறுநீரகத்திலும் முதுகு எலும்பிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடலோரக் காவற்படை அதிகாரியான திரு அஸ்‌ரில், சுயநினைவுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

“திரு அஸ்‌ரில் தமது மனைவியை அவரது அலுவலகத்தில் விட்டுவிட்டு, இன்னொரு மகளை அவர் பயிலும் உயர்நிலைப் பள்ளியில் விட்டுவிட்டு அஃபிஃபாவை தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரிக்கு அழைத்துச் சென்றபோது விபத்து நிகழ்ந்தது,” என்றார் திரு ஃபிர்தாவோஸ்.

இதற்கிடையே, விபத்தில் மரணமடைந்த அஃபிஃபாவுக்கு தெமாசெக் தொடக்கக்கல்லூரி அஞ்சலி செலுத்தியது.

அஃபிஃபாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் மரணமடைந்த நாளன்று அந்தத் தொடக்கக்கல்லூரியின் சமூக ஊடகத் தளங்களில் எதுவும் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

அஃபிஃபா கல்வியில் அதிக கவனம் செலுத்தியதாகவும் முனைப்புடன் செயல்பட்டதாகவும் அவரது ஆசிரியர்களான திருவாட்டி ஏனா மரியா, திருவாட்டி பிரமிளா கிருஷ்ணதாஸ், திரு லெனர்ட் லாவ் ஆகியோர் தெரிவித்தனர்.

“பிற்பகல் நேரங்களில் மாணவர்கள் சற்று களைப்பாக இருப்பதுண்டு. அப்போது சக மாணவர்களை அஃபிஃபா உற்சாகப்படுத்தி அவர்களைக் கலகலவென வைத்திருப்பார்,” என்று அஃபிபாவுக்கு உயிரியல் பாடம் கற்பித்த திருவாட்டி ஜீன் சோங் கூறினார்.

தெமாசெக் தொடக்கக்கல்லூரியின் 48வது மாணவர் மன்றத்தில் அஃபிஃபா அங்கம் வகித்ததாகவும் தொடக்கக்கல்லூரிக்கு அவர் மிகுந்த சிரத்தையுடன் சேவையாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
விபத்துமரணம்