சிங்கப்பூர் சிட்டி வர்த்தக வங்கியின் தலைவராக திரு அமிட் தவான் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவரது பதவிக்காலம் ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்குகிறது என்றும் சிட்டிகுருப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வங்கித்துறையில் அனுபவம் பெற்றுள்ள திரு அமிட், சிங்கப்பூர் சிட்டி வர்த்தக வங்கியின் வணிகம் மற்றும் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவார் என்றும் அதன் வர்த்தக உத்திகளையும் நிதித்துறைச் செயல்திறனையும் மேம்படுத்துவதற்குப் பொறுப்பு வகிப்பார் என்றும் அது குறிப்பிட்டது.
“தலைசிறந்த நிதி மையமாகவும் இதர ஆசிய நிதிச் சந்தைகளுக்கு மிக அருகில் இருக்கும் சிங்கப்பூர், சிட்டி வர்த்தக வங்கிக்கு ஒரு முக்கிய நடுவமாக விளங்குகிறது,” என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் வடக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, தெற்கு ஆசியா குழுமங்களுக்கான சிட்டி வர்த்தக வங்கியின் தலைவர் திரு குஞ்சன் கல்ரா.
“சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தலையெடுக்கும் நடுத்தர நிறுவனங்கள் வட்டார மற்றும் உலக அளவில் விரிவடையும் இலக்கு கொண்டுள்ளன,” என்றும் திரு கல்ரா தெரிவித்தார்.
சிட்டி வங்கியின் ஆசியாவில் தலையெடுக்கும் நிறுவனங்கள் பிரிவின் தலைவராகவும் திரு அமிட் தொடர்வார். அவர் அந்தப் பதவியை 2017ஆம் ஆண்டிலிருந்து வகித்து வருகிறார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.