மார்ச் மாதம் சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்க விகிதம், ஓராண்டுக்கு முன்புடன் ஒப்புநோக்க, 3.1 விழுக்காடு குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு, சேவைத் துறைகளில் மெதுவடைந்த விலை உயர்வு இதற்குக் காரணம்.
பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாத மூலாதாரப் பணவீக்கம் 0.2 விழுக்காடு குறைந்தது. ஒட்டுமொத்தப் பணவீக்கம் 0.1 விழுக்காடு சரிந்தது. தனியார் போக்குவரத்துக் கட்டணம் குறைந்தது இதற்கு முக்கியக் காரணம்.
பணவீக்கக் குறியீடுகள் இரண்டும், சந்தை முன்னுரைப்பைவிடக் குறைவாகவே பதிவாகியுள்ளன.
முன்னதாக, புளூம்பெர்க் நடத்திய கருத்தாய்வில் கலந்துகொண்ட ஆய்வாளர்கள், மூலாதாரப் பணவீக்கம் 3.5 விழுக்காடாகவும் ஒட்டுமொத்தப் பணவீக்கம் 3.1 விழுக்காடாகவும் பதிவாகும் எனக் கூறியிருந்தனர்.
மார்ச்சில் புதிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் குறைந்ததற்கு ஏற்ப தனியார் போக்குவரத்துக் கட்டணங்கள் குறைந்தன.
சமைக்கப்படாத உணவுப் பொருள்களின் விலை சிறிதளவே உயர்ந்தது. விமானப் பயணக் கட்டணங்கள் குறைந்து விடுமுறைச் செலவு சற்றே அதிகரித்ததாக வர்த்தக, தொழில் அமைச்சும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.
ஆடைகள், காலணிகள் போன்றவற்றின் விலை குறைந்து, மதுபானம், புகையிலை ஆகியவற்றின் விலை உயர்ந்ததால் சில்லறை விற்பனை, இதர பொருள்களின் பணவீக்கம் குறைந்தது.
தங்குமிடக் கட்டணம் தொடர்பான பணவீக்கமும் சற்றே குறைந்தது. வீட்டு வாடகை சிறிது உயர்ந்தது இதற்குக் காரணம்.
மின்சாரக் கட்டண உயர்வு மெதுவடைந்ததால், மின்சாரம், எரிவாயு தொடர்பான பணவீக்கம் குறைந்தது.
இந்த ஆண்டு (2024) மூலாதாரப் பணவீக்க விகிதம் 2.5 விழுக்காடாக இருக்கும் என்றும் ஒட்டுமொத்தப் பணவீக்க விகிதம் 3.5 விழுக்காடாக இருக்கும் என்றும் அமைச்சும் ஆணையமும் முன்னுரைத்துள்ளன. பொருள், சேவை வரி ஒன்பது விழுக்காடு உயர்ந்ததன் தாக்கத்தைத் தவிர்த்துப் பார்த்தால், இவை முறையே 1.5 விழுக்காடாகவும் 2.5 விழுக்காடாகவும் இருக்கும் என்று கூறப்பட்டது.