16 வயது சிறுவன் ஒருவனின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டியதாக இளையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டை எதிர்நோக்கும் அந்த இளையருக்கு சம்பவம் நிகழ்ந்தபோது 17 வயது.
ஆடைகளைக் களையவும் புட்டியில் இருந்த சிறுநீரைக் குடிக்கவும் அந்தச் சிறுவனை அவர் பலவந்தப்படுத்தியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த இளையரின் தோழிக்கு அச்சிறுவன் தொல்லை விளைவித்ததால் அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.
பயமுறுத்தப்பட்ட அச்சிறுவன் அந்த இளையர் கூறியதைச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறுவன் தமது ஆடைகளைக் களைந்து சிறுநீர் குடிப்பதை அந்த இளையர் காணொளி எடுத்தார்.
இந்தச் சம்பவம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிகழ்ந்தது.
குற்றம் சுமத்தப்பட்ட இளையருக்குத் தற்போது 18 வயது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் இளையர், பாதிக்கப்பட்ட சிறுவன் ஆகியோர் தொடர்பான விவரங்களை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுவனுக்குக் கொடுமை இழைத்ததாகக் கூறப்படும் இளையருக்கு நான்கு பேர் உடந்தையாக இருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்தபோது அவர்கள் 15 வயதிலிருந்து 17 வயதுக்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்குடன் தொடர்புடைய அனைவரின் பெயர்களும் நீதிமன்ற ஆவணங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 18ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும்.