சிறப்புத் தேவைகள் உள்ள சிறுவர்களின் பெற்றோரில் 65 விழுக்காட்டினருக்கு நிபுணத்துவ மனநல ஆதரவு தேவைப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
‘டேஒன்’ என்று அழைக்கப்படும் மனநல ஆதரவு அறிமுகத் திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.
இந்த ஈராண்டு அறிமுகத் திட்டத்துக்கு $3.6 மில்லியன் செலவழிக்கப்பட்டுள்ளது. இது 2022ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதற்கு கேகே மகளிர், சிறார் மருத்துவமனையும் லியேன் அறநிறுவனமும் இணைந்து நிதி வழங்கின.
சிறப்புத் தேவைகள் உள்ள சிறுவர்களின் பெற்றோருக்கு மனநல ஆதரவு வழங்கும் இலக்குடன் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆய்வின் முடிவுகள் போனா விஸ்டா எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ள ரோசெஸ்டர் காமன்சில் ஏப்ரல் 23ஆம் தேதியன்று வெளியிடப்பட்டன.
“குழந்தை மருத்துவ நிபுணர்கள் என்கிற முறையில், குழந்தைகளின் நலனில் முழுக் கவனம் செலுத்துகிறோம். ஆனால் தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு எங்கள் மருந்தகத்துக்கு வரும் பெற்றோர் சிரமப்படுவதையும் நாங்கள் கவனிக்கிறோம். பெற்றோருக்கும் ஏதேனும் ஒரு வகையில் உதவ முடியுமா என்ற கேள்வி எங்கள் மனதில் அடிக்கடி எழுந்ததுண்டு,” என்று கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் குழந்தை வளர்ச்சித் துறையின் தலைவரும் மூத்த ஆலோசகருமான இணைப் பேராசிரியர் மேரி டேனியல் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 7,000 சிறுவர்களுக்குத் தொடர்புத் திறன் குறைபாடு, கற்றல் குறைபாடு போன்ற பிரச்சினைகள் இருப்பது தெரிய வருகிறது.
இவர்களில் 70 விழுக்காட்டினருக்கு கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் குழந்தை வளர்ச்சித் துறை தேவையான பராமரிப்புச் சேவைகளை வழங்குகிறது.
இந்நிலையில், அறிமுகத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தங்கள் பிள்ளைகளை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரும் பெற்றோரை அணுகி அவர்களது மனநலம் குறித்து பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் விசாரித்தனர்.
2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கும் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 1,157 பெற்றோரிடம் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பேசினர்.
அவர்களில் 626 பேர் திட்டத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவித்து மனநலப் பரிசோதனை செய்துகொண்டனர்.
அவர்களில் ஏறத்தாழ 41 விழுக்காட்டினருக்கு இலேசான மனநல பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
கிட்டத்தட்ட 25 விழுக்காட்டினருக்கு மிதமான அல்லது கடுமையான மனநல பாதிப்பு இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.