ஸ்பெயினுக்குப் பயணம் மேற்கொண்ட சிங்கப்பூரரான திருவாட்டி ஆட்ரி ஃபாங்கின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு எதிராக மேலும் ஒரு முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது.
மிட்ஷல் ஓங் வாடகைக்கு எடுத்த கார், திருவாட்டி ஃபாங்கின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்ததை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஸ்பானிய நாளிதழில் ஏப்ரல் 24ஆம் தேதியன்று தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி ஃபாங்கின் உடல் கண்டெடுக்கப்பட்ட பாதாம் தோட்டத்தில் ஸ்பெயின் நேரப்படி ஏப்ரல் 9ஆம் தேதி இரவு 11.46 மணி அளவில் ஓங் ஓட்டிய கார் கிட்டத்தட்ட 18 நிமிடங்களுக்கு நின்றது. அதன் பிறகு அந்த கார் வந்த வழி திரும்பியது.
அதுமட்டுமல்லாது, ‘வேக்கியும் கிளினர்’ எனப்படும் தூசு உறிஞ்சியை ஓங் காரில் கொண்டு சென்றதாக ஸ்பானிய நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வாடகைக்கு எடுத்த காரைச் சுத்தம் செய்ய தூசு உறிஞ்சியை ஓங் தம்முடன் கொண்டு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நீதிபதி தெரிவித்தார்.
ஸ்பெயினுக்குத் தனியாகப் பயணம் மேற்கொண்ட திருவாட்டி ஃபாங், ஏப்ரல் 9ஆம் தேதியன்று தமது உடைமைகளை ஹோட்டலிலேயே விட்டுவிட்டு வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது.
அதற்குப் பிறகு அவரை யாரும் பார்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 10ஆம் தேதி காலை, ஸ்பானிய காவல்துறை ஆய்வாளர் ஒருவர் அபனில்லா நகரில் உள்ள ஆர்எம்-422 நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள உணவகத்தை நோக்கி கார் ஓட்டிச் சென்றபோது 39 வயது திருவாட்டி ஃபாங்கின் சடலத்தை அவர் கண்டெடுத்ததாகக் கூறப்படுகிறது.
திருவாட்டி ஃபாங்கின் உடலில் 30 கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி ஃபாங்கைக் கொன்றதாகச் சந்தேகத்தின் பேரில் ஏப்ரல் 16ஆம் தேதியன்று சிங்கப்பூரரான மிட்ஷல் ஓங் கைது செய்யப்பட்டார்.