நீக்குபோக்கான வேலையிட வழகாட்டிகள் அண்மையில் வெளியானது. இது பல சிங்கப்பூர் நிறுவனங்கள் தங்கள் வேலையிடக் கொள்கைகளை மாற்றும் சிந்தனைப்போக்கை தூண்டியுள்ளது.
இதில் பல முதலாளிகள், நீக்குப்போக்கான வேலையிட அம்சங்களை உள்ளடக்கியிருக்கும் நிறுவனங்கள்கூட, தற்பொழுது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. நீக்குப்போக்கான வேலையிட ஏற்பாடுகள் உற்பத்தியை அதிகரிப்பதுடன், ஊழியர்களுக்கு மனத்திருப்தியையும் அளிக்கக்கூடும் என்று அவை எண்ணுகின்றன. எனினும், இந்த ஏற்பாட்டில் சிறிய நிறுவனங்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்று தெரியவந்துள்ளது.
சிறிய நிறுவனங்களிடம் ஆள்பலமும் குறைவு, வளங்களும் குறைவு. எனவே, இதுபோன்ற நீக்குப்போக்கான வேலையிட ஏற்பாடுகள் தங்கள் நிறுவனங்களில் தங்கள் விருப்பத்துக்கு மாறான வேலை கலாசாரம் உருவாகி தங்கள் வர்த்தக நோக்கங்களுக்கு மாறான நிலை ஏற்பட்டுவிடும் என்பதை சிறிய நிறுவனங்கள் உணர்ந்துள்ளன என்று கூறப்படுகிறது.
பெரிய நிறுவனங்கள் ஏற்கெனவே நீக்குப்போக்கான வேலையிட சூழலை உருவாக்கிக் கொண்டுள்ளன.
இதுபற்றிக் கூறும் கூகல் சிங்கப்பூர் நிறுவன, சந்தை மனிதவளப் பிரிவின் தலைவர் திருவாட்டி விவி கோ, தங்கள் நிறுவனம் வேலை நேரத்தை குறிப்பிடுவதில்லை என்று கூறினார். இதன்மூலம் அந்த நிறுவன ஊழியர்கள் தங்களது சிறப்பான எண்ணங்களை புத்தாக்கமாகச் சிந்தித்து செயல்படலாம் எனத் தனது நிறுவனம் நம்புவதாக திருவாட்டி விவி கோ செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) அன்று தெரிவித்தார்.
“நீக்குப்போக்கான வேலை நேரம் ஒருபக்கம் இருந்தாலும், வாரத்தில் இரண்டு நாள் ஒருவர் எங்கிருந்து, அல்லது ஓராண்டில் நான்கு வாரம் உலகின் எந்ந நாட்டில் ஒருவர் தன்னால் சிறப்பாக வேலை செய்ய முடியும் என்று நினைக்கிறாரோ அவர் அங்கிருந்து வேலை செய்ய அனுமதி உண்டு,” என்று திருவாட்டி விவி கோ விளக்கினார்.
“இந்த இருவேறு வேலை அம்சம் நீக்குப்போக்கான வேலை ஒருபக்கம் இருக்க, வாரத்தின் மற்ற நாள்களில் சக ஊழியர்களுடன் கலந்துறவாட, அவர்களுடன் அதிக ஒத்துழைப்புடன் செயல்படுவது என ஊழியர்கள் சமநிலை காண உதவுகிறது,” என்று அவர் கூறினார்.
இதன் தொடர்பில் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை வகுத்த முத்தரப்பு பணிக்குழுவின் புதிய வழிகாட்டிகளுக்கு ஏற்ப தமது நிறுவனம் தனது கொள்கைகளை மேம்படுத்தும் என்று அவர் சொன்னார்.