‘வேக் அப் சிங்கப்பூர்’ இணையத்தள நிர்வாகியாக செயல்படுவர் மீது அவர் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் பொய்யான தகவல் ஒன்றை பதிவு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரிஃபின் இஸ்கந்தர் ஷா அலி அக்பர், வயது 26, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் குழந்தை பெரும்பாலும் இறந்துள்ளது - கே கே மகளிர், சிறார் மருத்துவமனையில் மாது தனக்கு ஏற்பட்ட மனவேதனையை நினைவுகூறுகிறார் என்ற தலைப்பில் ‘வேக் அப்’ இணையத்தளத்தில் தகவல் ஒன்றைப் பதிவு செய்தார்.
அந்தப் பதிவில் கே கே மகளிர், சிறார் மருத்துவமனையின் தவறான நிர்வாகத்தால் மாது ஒருவருக்கு கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தை கலைந்ததாக பதிவு செய்திருந்தார். இந்தத் தகவலை அவர் வேக் அப் இணையத்தளளம், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகியவற்றிலும் பதிவு செய்தார்.
அரிஃபின் மீது புதன்கிழமை (ஏப்ரல் 24) அன்று ஓர் அவதூறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு அவர் குற்ற ஒப்புதலோ, குற்ற மறுப்போ தெரிவிக்கவில்லை. அவரது வழக்கு விசாரணை மே மாதம் 24ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.
இதன் தொடர்பில் 2022ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி கே கே மகளிர், சிறார் மருத்துவமனை காவல்துறையில் புகார் அளித்திருந்தது.
அரிஃபின் பதிவு செய்த தகவலில் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி 20 வார கர்ப்பமுற்றிருந்த மாது ஒருவர் கொவிட்19 கொள்ளைநோயால் தாக்கப்பட்டிருந்தார் என்றும் மருத்துவமனை சிகிச்சைக்காக அங்கு வந்த அவரை மருத்துவமனை சரிவரக கவனிக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. அன்றைய தினம் பிற்பகல் கிட்டத்தட்ட 2.00 மணிக்கு அந்த மாது கடுமையான வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தார் என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரிஃபின் பதிவேற்றிய தகவலின்படி, அந்த மாது மருத்துவமனையின் கார் நிறுத்தும் இடத்தில் காக்க வைக்கப்பட்டிருந்தார் என்றும் அவருக்கு 5.00 மணிக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டது என்றும் ஆனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
மேலும் அந்த மாது மருத்துவரை 6.00 மணிக்குதான் பார்த்தார் என்றும் அவர் தனது சிசுவை இழந்தார் என்றும் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், அவருடைய இறந்த சிசு கழிவுப் பொருளாக தூக்கி வீசப்பட்டதாக தெரிவித்ததாக பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவமும் மருத்துவமனை மீது கூறப்படும் புகார்களும் தவறு என்று தெரியவந்தது. அந்த மாது வந்த ஒரு மணிநேரத்தில் மருத்துவமனை அவருக்கு சிகிச்சை அளித்ததாகவும் அவரது கர்ப்பம் கலையவில்லை என்றும் தெரியவந்தது.