சிங்கப்பூரின் ஆகப் பெரிய $3 பில்லியன் பணமோசடி வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளில் ஒருவரான சூ போலின் மீது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் ஏப்ரல் 24ஆம் தேதி (புதன்கிழமை) சுமத்தப்பட்டன.
கம்போடியக் கடப்பிதழ் வைத்திருக்கும் சீன நாட்டவரான 42 வயதான சூ, மொத்தமாகத் தற்போது 13 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
நாசிம் சாலையில் உள்ள அவரது சொகுசு பங்களாவில் $777,220க்கும் அதிகமான ரொக்கம் வைத்திருந்தது, ‘டொயோட்டா ஆல்பர்ட் ஹைப்ரிட்’ ரக சொகுசு கார் ஒன்றை அவர் கிட்டத்தட்ட $332,280க்கு வாங்கியது ஆகிய இரண்டும் அவர்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
இவை அனைத்தும் அவர் வெளிநாட்டில் சட்டவிரோதமாகச் சூதாட்ட செயலில் ஈடுபட்டதால் கிடைத்த பணத்திலிருந்து பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டு அக்டோபரில் மனிதவள அமைச்சகத்தின் பணிக் கட்டுப்பாட்டாளரிடம் அவருடைய மனைவி மா நிங், ‘எஸ்ஜி-கீரி’ நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்தல் இயக்குநராகப் பணியமர்த்தப்படுவார் என்று அவர் பொய்யுரைத்ததாகக் கூறப்படுகிறது.
இதுவே அவர்மீது புதன்கிழமை சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டு ஆகும்.
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சூ, ஏப்ரல் 29ஆம் தேதி ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.